இப்னு ஹாஜா
கப்றினுடைய அதாபு (அவஸ்த்தை)க்குக் காரணம் உலகத்தின் மீது வைக்கும் உவப்பேயாகும். அந்த அதாபு ஒரே விதமானதன்று. உலகத்தினுடைய உவப்பிற்குத்தக்கபடி சிலருக்கு அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவுமிருக்கும்.
ஒருவனுக்கு உலகப்பொருட்களில் ஏதெனும்கொஞ்சமிருந்து அவற்றின் மீது அவன் பற்றுவைத்திருந்தால் அவனுக்கு உண்டாகும் அதாபானது, நிதி நிலங்களும்,தோட்டங்களும், பணியாட்களும், கன்றுகாலிகளும், அதிகாரமும் மேலும் பல செல்வங்களுமிருந்து அவை ஒவ்வொன்றிலும் பற்றுதலுடையவனுக்குண்டாகும் அதாபுக்குச் சமமாகாது.
ஒரு சமயம் றசூலே கரீம் (ஸல்) அவர்கள் கப்றுடைய வேதனைகளைப்பற்றிக் கூறும்போது “ ஓ ஜனங்களே! அல்லாஹ் கூறுகின்றான்”-
“எவனொருவன் என்னுடைய தியானத்தை விட்டும் புறக்கணிப்பானாகில், அவனுக்கு கஷ்டமான வாழ்க்கையே இருக்கின்றது” என்று.
இந்த ஆயத்து அருளப்பட்டது எதற்காக? என்பதை நீங்கள் அறிவீர்களா?” என வினவ” அருகில் வீற்றிருந்த சஹாபாக்கள் “அதுபற்றி அல்லாஹ்வும், அவனது றசூலுமே மிக அறிந்தவர்களாவார்கள்.” என்று கூறினார்கள்.
அது கேட்டு நாயகம் ஸல் அவர்கள் “இவ்வுலகில் அல்லாஹ்வை மறந்து திரியும் பாவிகள் மீது கப்றில் தொன்னூற்றி ஒன்பது பெரும் பாம்புகளைச்சாட்டப்படும்.
அப்பாம்புகள் ஒவ்வொன்றிற்கும் ஒன்பது விதத் தலைகள் உண்டு. கியாம நாள் வரை அப்பாவிகளைக் கடித்துக்கொண்டும், நக்கிக்கொண்டும், அவர்கள் மீது சீறி விழுந்து கொண்டும் இருக்கும்” என்று நவின்றார்கள்.
இதற்கு இமாம் கஸ்ஸாலீ (றஹ்) அவர்களின் விளக்கம் வருமாறு “ஆரிப் (அறிந்தவர்கள்) இப்பாம்புகளை அகப்பார்வையால் பார்க்கிறார்கள். குதர்க்கவாதிகள் இதற்கு விதண்டாவாதம் பேசித்திரிவதோடு கப்றில் ஒன்றும் நிகழ்வதில்லை. அவ்விதம் ஏதேனும் நிகழுமாயின், அதற்கு நாங்கள் பரிகாரம் செய்து கொள்வோம் எனப்பகர்கின்றனர்.
அப்போலிகளுக்குக் கூறுங்கள் அப்பாம்புகள் வெளியே இருந்து வந்தவைகளல்ல. அவை இறந்தவனுடைய ஜீவனுக்குள் மறைந்திருந்தவை. அவன் அவற்றை அறியாதவனாக இருந்தான். ஆகவே இப்பாம்புகள் இறந்தவனுக்குத்தெரிகின்றன. உயிருடனிருப்பவர்களில் அல்லாஹ்வுடைய ஆரிபுகளையே அல்லாமல் வேறெவரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
ஏனென்றால் பரலோகப் பொருட்களை வெளிக்கண்களால் பார்க்க முடியாது. இறந்தவனுக்கோ மறு உலகப்பொருட்கள் தென்படுகின்றன. ஆகவேதான், அப்பாம்புகள் அவனிடமிருந்தே உருவெடுத்து அவன் பார்வைக்குத் தோன்றுகின்றன.
நித்திரை செய்துகொண்டிருப்பவன் சொப்பனத்தில் சில சமயம் தன்னை பாம்பு தீண்டியதாகக் கண்டு திடுக்கிட்டு விளிக்கின்றான்.
அவன் அருகில் விழி நிலையில் இருக்கும் எவருக்கும் இச்சம்பவம் புரிவதில்லை அவர்கள் காண்பதுமில்லை. அது மற்றவர்களுக்குத் தென்படாமலிருந்தாலும் நித்திரை செய்தவனுக்கு அக்காட்சி உண்மையுள்ளதாக இருக்கின்றது. அதனால் உண்டாகும் மன வேதனைகளை அவன் அனுபவிக்கின்றான். விழித்திருப்பவன் அனுபவிப்பதில்லை.
இவன் அப்பாம்பை பார்க்காததினாலும், அது தீண்டாத தினாலும் அதனால் ஏற்படும் அவஸ்த்தை இவனுக்கு கொஞ்சமுமில்லை.பின்பு நீ இதை மறுத்து அவனுக்குத் தோன்றுவது உண்மையில் பாம்பு அல்லவென்றும், அது ஒரு நினைவாகவிருக்கின்றது என்றும் கூறுவாயாகில் அது உன் அறிவின் பிசகேயாகும்.
ஏனென்றால் அனுபவத்திற்கு வரும்பொருள் உள்ளதென்றும், அனுபவத்திற்கு வராத பொருள் இல்லாததென்றும் சொல்வது நித்திரையில் கண்டு அனுபவித்த பொருளை மற்றவர்கள் பார்க்காவிட்டாலும் அது உள்ளதாகவே இருக்கின்றது.
இறந்தவன் விசயத்திலும், நித்திரைகொள்பவன் விசயத்திலும், அவஸ்த்தையும் அதற்குக் காரணமும் இருக்கத்தான் செய்கிறது.
இறந்தவனுக்கும், நித்திரை கொள்பவனுக்கும் வித்தியாசமாவது: நித்திரையில் இருப்பவன் உடனே விழித்துக்கொள்வதினால் அந்த அவஸ்த்தையில் நின்றும் தப்பித்துக்கொள்கின்றான். மரணத்திற்குப் பின்னுள்ள ஜீவியத்திற்கு முடிவில்லை.
ஆதலால் இறந்தவன் அந்த அவஸ்த்தையிலிருந்து நீங்க வழியின்றி அதிலேயே சிக்கி விடுகின்றான். இவ்வுலகத்தில் ஐயறிவிற்குப் புலப்படுகிற பொருட்கள் எப்படியோ அப்படியே அவ்வுலகத்தில் அந்தப்பாம்புகள் அவனோடு நிலைத்திருக்கும்.
மேற்கூறிய அதாபுகள் அவனுடைய துர்க்குணங்களில் நின்றும் ஜனித்தவையாகும். அதன் ஒன்பது தலைகள் என்பது அத்துர்க்குணங்களின் கிளைகளாகும். ஆகவே அந்தப்பாம்புகளின் உற்பத்திக்குக்காரணம் உலகப்பற்றிலுண்டாகின்ற துர்க்குணங்களின் எண்ணிக்கையின் படி அதன் தலைகள் முளைக்கின்றன.
அந்த ஒன்பதின் விளக்கமாவது
01 பொறாமை 02 கபடம் 03 பாசாங்கு 04 பெருமை 05 அவா 06 வஞ்சகம் 07 பகைமை 08 பொருளாசை 09 அதிகார விருப்பம் இவைகளாம்.
அந்தப்பாம்பின் உற்பத்தியையும் அதன் ஒன்பது தலைகளையும் நுபுவ்வத்,விலாயத் என்ற மெய்யொளியால் பார்க்கலாம். இயற்கையாகவே பாவிகளுடைய ஜீவனுக்குள்ளே மறைந்து,அவர்களுக்குத் தெரியாமலிருந்த இந்தப்பாம்புகள் இப்போது கப்றினுள் அவர்களுக்கு விரோதியாக வெளிப்பட்டன.
இந்தப்பாம்புகள் வெளியே இருக்குமாயின் சற்று நேரமாவது அவனுக்கு ஆறுதல் கொடுக்கும். இவை ஜீவனுக்குள் குடிகொண்டவையாகவும், துர்க்குணங்களால் ஜனித்தவையாகவும் இருப்பதால் அவற்றை விட்டும் தப்பியோட இவனால் முடிவதில்லை.
உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தன் அதாபிற்கு மூலகாரணமாக இருக்கின்றவைகளை இவ்வுலகத்திலிருந்தே சேகரித்துக்கொண்டு போகின்றான். அவை அவனுக்குள்ளேயே இருக்கின்றன.
இதனாலேதான் நபி பெருமான் (ஸல்) அவர்கள்- “ இந்த அதாபாகிறது நீங்கள் செய்த கெட்ட அமல்களாயிருக்கும், அதை உங்களிடமே திருப்பப்பட்டது” எனமொழிந்துள்ளார்கள்.
“கப்று என்பது மனிதன் இறுதி நாளை நோக்கிச் செல்லும் பிரயாணத்தின் இடையில் தங்கிச்செல்லும் ஒரு சத்திரமாகும். அச்சத்திரத்தில் நிகழும் சோதனைகளிலிருந்து அவன் மீட்சி பெறக்கூடுமாயின், அதற்குப்பின்னால் ஏற்படும் சோதனைகளை மிக இலகுவாய்க்காண்பான்.
அச்சத்திரமாகிய கப்றை விட்டும் தப்பிச்செல்ல முடியாதவன் எங்கும் கடினமான சோதனைகளுக்கு ஆளாவான். அவனது பட்சாத் தாபங்கள் எல்லாம் ஒருவித பலனும் கொடுக்காத நிலையில் மிகவும் கலங்கிப்பரிதவிப்பான்.
மேன்மை மிக்க நாயகம் ஸல் அவர்களின் செல்வப்புதல்வி மாதர்க்கரசி, பீபீ பாத்திமா ஸஹ்ரா (றழி) அவர்கள் இறைவனது திருவுளப்படி உயிர் நீங்கியவுடனே ஹஸ்ரத் அலீ றழி அவர்கள், இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் றழி அவர்கள், அபூ ஸர்ருல் கப்பாரீ றழி அவர்கள், ஆக இந்நால்வரும் அவர்களது ஜனாஸாவை தொழுவித்த பின் அநேக சஹாபாக்கள் சூழச் சுமந்து சென்று கப்ரின் அருகில்வைத்து-,
பாத்திமா நாயகியின் புனித அடக்கஸ்த்தலம்
“ஏ கப்றே! இவர்கள் நாயகத்தின் செல்வப்புதல்வி ஹஸ்ரத் அலீ அவர்களின் மனைவி, இமாம் ஹஸன் ஹுஸைனி அவர்களின் மாதா மாதர்க்கரசி ஸய்யித்தத் பாதிமா நாயகி என நீ அறிவாயா?” என்று அபூ ஸர்ரு றழி அவர்கள் சப்தமிட்டுக் கேட்க, அல்லாஹ்வின் தத்துவத்தால் கப்றிலிருந்து பதில் சப்தம் கேட்டது.-
“யான் குலப்பெருமைக்குப் பணிந்து போகக்கூடிய வீடல்லேன். நற் கருமங்களின் மேலீட்டால் எவரது இதயம் பரிபக்குவம் எய்தியதோ அவரே என்னிடத்தில் ஆறுதல் பெறுவார்” என்று புதை குழியான கப்று பேசியதாக துர்றதுன்னாஸிஹீன் எனும் நூலில் குறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சப்தம்கொண்டு அன்று கப்று பேசியதற்கான காரணம் கப்றினுடைய அமழிகளை ஏனை மக்களும் விளங்கவேண்டும் என்பதற்காகவும், நல் அமல்களை மக்களும் அதிகம் செய்யவேண்டுமென்பதற்காகவும் தான்.
அன்றி பாத்திமா நாயகிக்கு பாதகமாகவோ அல்லது அண்ணலாரின், நல் வழி பெற்ற நாதாக்களின் குலப்பெருமையை சீர்கெடுப்பதற்காக அல்ல.
அப்படி விளங்கிக்கொள்வது மகா தவறாகும். பீபீ பாத்திமா சுவனத்துப் பேரரசியாவார்கள். கண்மனி நாயகத்தின் ஈரல் துண்டு என வருணிக்கப்பட்டவர்களுமாவார்கள்.
முற்றும்