"ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் ஞானகுருக்களில் ஒருவரும் “ஹிகம்” என்ற ஞானநூலை எழுதியவருமான அஹ்மத் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ (றஹ்) அவர்கள் தங்களின் ஞானமாணவனுக்கு “தாஜூல் அறூஸ்” என்ற தலைப்பில் எழுதிய அறபு மடலின் சாரம்"
நமது வாழ்நாளில் கிடைக்கப்பெறுவதற்கு மிகவும் அருமையான பொக்கிஷமாகும் இவ்வுரை. இதனை மிகவும் பேணுதலாகப் படித்து ஈருலகிலும் பயன் பெறுவோமாக! இதனை தமிழில் வடித்தவர்கள் சங்கைக்குரிய “காத்தமுல் வலி”, “காமில் முக்கம்மில்” அஷ்ஷேக் அப்துல் ரஊப் மிஸ்பாஹி அவர்களாவர். இது 2002 ஆண்டு இலங்கையில் வெளியான அல்மிஷ்காத் மாதாந்த சஞ்சிகையில் தொடராக வெளிவந்ததாகும் – ஆசிரியர்-
அன்பு மகனே!
உனது உள்ளத்துக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கவனமாய் கேள்! உனது உள்ளம் வீட்டின் முகடு போன்றது. வீட்டில் நெருப்பெறித்தால் அதிலிருந்து எழும்புகை முகடைக் கருப்பாக்கி விடும். இவ்வாறுதான் மனவெழுச்சியெனும் புகை உடலில் உருவானால் “கல்பு” என்ற முகடு கறுப்பாகிவிடும்.
அன்பு மகனே!
மனிதர்களால் உனக்கு இன்னல் ஏற்படும்போது அவர்களைச் சபித்து கண்டித்துவிடாதே! ஆயினும் அந்நேரம். நீ செய்த பாவத்தின் நிமித்தம் அல்லாஹ்தான் உன்னைக் கண்டிக்கிறான் என்று நினைத்து நீ உன்னை கண்டித்துக்கொள். இதற்கு மாறாக அந்த இன்னல் மனிதர்களால்தான் ஏற்பட்டதென்று நினைத்து அவர்களைக் கண்டித்துவிடாதே!
ஏனெனில் நீ அவ்வாறு செய்தால், நீயும் நாயும் ஒன்றே. ஏனெனில் நாய்க்கு கல்லால் அடித்தால் அந்நாய் முதலில் அக்கல்லையே கடிக்கும். இதற்குக் காரணம் கல்தான் தனக்கு அடித்ததாக அது கருதுவதேயாகும். கல்லுக்கு சுயமாக அடிக்கும் சக்தி இல்லை என்பதை அந்த நாய் விளங்கிக்கொள்வதில்லை.
இதேபோல் மனிதனுக்கு சுயமாக இன்னல் கொடுக்கும் சக்தி இல்லை. என்பதை விளங்காமல் மனிதர்களைக் கண்டிக்க முன்வருகிறாய். இதன் உண்மையை நீ விளங்கினால் அதாவது மனிதன் மூலம் அல்லாஹ்தான் கண்டித்துள்ளான் என்ற உண்மையை நீ விளங்கினால் மனிதர்களைக் கண்டிப்பதற்கு நீ முன்வருவாயா? இவ்வாறே உனக்கு மனிதர்களால் ஒரு உதவி கிடைத்தால் அவர்கள் மூலம் அல்லாஹ்தான் உதவினான் என்பதை விளங்கி அல்லாஹ்வுக்கே நன்றி செய். அதோடு அவர்களுக்கும் நன்றி செய்!
பால் குடித்த பாத்திரத்தை கழுவித்தானே வைக்க வேண்டும். இவ்வுண்மையை நீ உணராமல் உனக்கு உதவி செய்தவனோ உணவு தந்தவனோ மனிதனென்று நீ நம்பினால் உனக்கும் மிருக்கத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.?
ஏனெனில் மிருகம் தனக்கு உணவு கொடுத்தவனைக் காணும்போது வாலையும் தலையையும் அசைக்கிறது. இதற்கு காரணம் தனக்கு உணவளித்தது தனது எஜமான் என்று அது கருதுவதேயாகும்.
எனவே நீ புத்தியுல்லவனாயிருந்தால் நன்மையும், தீமையும் அல்லாஹ்விலிருந்தே உண்டாகிறதென்பதைப் புரிந்துகொள்! இதற்கு மாறாக நன்மை இறைவனிடமிருந்தும், தீமை மனிதர்களிடமிருந்தும் உண்டாகிறதென்று நீ நம்பினால் உனது நம்பிக்கை சரியாக மாட்டாது.
அன்பு மகனே!
மனிதர்களிடம் மதிப்பு பெற விரும்புகின்றாய். ஆனால் உன்னையும் மற்ற வஸ்த்துக்களையும் படைத்தவனிடம் மதிப்புப் பெறாமலிக்கின்றாய். இது அறியாமையா? இல்லையா? சிந்தனை செய்துபார்! மக்களிடம் மதிப்பு பெற விரும்பியவன் வழிதவறிவிட்டான். வழிதவறியவன் தான் நாடிய இடத்தை அடைய முடியாதல்லவா?
உனது “நப்ஸ்” ஐ உனது “கல்பு’ ஒப்படைத்துவிடு. இதற்குமாறாக “நப்ஸ்” ஐ அதனிடமே ஒப்படைத்தால் நீந்தத் தெரியாதவனைப் பிடித்து கரைசேர நினைத்தவனைப் போன்றாகிவிடுவாய். அவனும் மூழ்கி விடுவதுடன் அவனுடன் நீயும் மூழ்கிவிட நேரிடும். உனது “நப்ஸ்” ஐ கல்பிடம் ஒப்படைத்தால் நன்றாக நீந்தத் தெரிந்தவனை பிடித்து கரைசேர நினைத்துவிட்டாய். அவனும் கரைசேர்வதுடன் உன்னையும் கரைசேர்த்து விடுவான்.
எனவே உனது “நப்ஸ்” ஐ கல்பிடம் ஒப்படைத்து விடு. நன்றாகப் பார்வை தெரிந்தவன் குருடனிடம் வழிகேட்கமாட்டான் என்பதப் புரிந்துகொள் உனக்கும், அல்லாஹ்வுக்குமிடையில் உள்ள விடயத்தில் நீ சரியாக நடந்தால் நிச்சயமாக நீ அதிஷ்டசாலியாகிவிடுவாய்.
நீ புத்திகுறைந்தவனாயிருக்கிறாய். இந்நிலையில் நீ பச்சிளங்குழந்தைதான் அக்குழந்தைக்கு தாய் அழகிய உடைகளை அணிவிக்கின்றாள். ஆயினும் அக்குழந்தை புத்தியில்லாத காரணத்தினால் உடைகளை அசுத்தமாக்கிவிடுகிறது. அசுத்தத்துடன் தனது குழந்தையைப் பார்க்க விரும்பாத தாய் மீண்டும் நல்ல ஆடைகளை அணிவிக்கின்றாள். அதையும் அக்குழந்தை அசுத்தமாக்கி விடுகின்றது. புத்திக்குறைவின் காரணத்தால் குழந்தைக்கு ஒன்றும் புரிவதில்லை.
அறிஞர் அபுல்ஹஸன் ஷாதுலீ (றழி) பின்வருமாறு கூறுகிறார்கள். ஒரு நாள் யாருமில்லாத இடத்தில் தனித்திருந்தேன். அப்போது அலீயே! உனது உடையைச் சுத்தமாக வைத்துக்கொள் என்று ஒர் அசரிரீ கேட்டது. எனது உடை எதுவென்று கேட்டேன். அலீயே அல்லாஹ் ஐந்து உடைகளை உனக்கு வழங்கியுள்ளான். அவை “மஃரிபஹ்”, என்ற இறைஞானம் “தவ்ஹீத்” என்ற ஏகத்துவம் “மஹப்பத்” என்ற அன்பு “ஈமான்” என்ற விசுவாசம் “இஸ்லாம்” என்ற தூயமார்க்கம். நீ இவ்வைந்தையும் சுத்தமாக வைத்திருப்பதவசியம்.
இவ்வாறு நீ செய்தால் உனது வேலைகள் யாவும் இலகுவாகும். உன்னால் பாவம் அறவே நிகழாது. அவ்வாறு நிகழ்ந்தாலும்கூட அவ்வைந்து உடைகளும் இருக்கும்வரை நீ மன்னிக்கப்படுவாய் என்று பதில் கிடைத்தது. பல்லாண்டுகள் உலகில் வாழ்ந்து விட்டோம் என்ற பெருமையுடன் உலகைவிட்டும் பிரிகின்றாய். ஆனால் உலகில் நீ அனுபவிக்கவேண்டிய இன்பத்தை அனுபவிக்கவில்லை. உலகில் நீ அனுபவிக்கும் இன்பங்களில் மிகச் சிறந்தது உனது இறைவனுடன் நீ “முனாஜாத்” உரையாடும்போது கிடைக்கின்ற இன்பமேயாகும்.
அன்பு மகனே!
நீ செய்த நற்கிரியைகளை நினைத்து அகப்பெருமை கொண்டு மற்றவர்களைவிட உன்னைச் சிறந்தவனென்று நீ நினைத்து உன்னைக்கண்ணிய்படுத்துமாறு அவர்களிடம் கேட்காதே. அவர்கள் உன்னைக் கண்ணியப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்காதே. அவ்வாறு நீ கேட்டால் அல்லது எதிர்பார்த்தால் உன்நிலைமை மிகவும் பயங்கரமானதாகும். உன்நிலைமை என்னாகும் என்பது பற்றிச் சிந்திக்கவேண்டும். எனவே நீ எவ்வளவுதான் நற்கிரிகையை புரிந்தாலும் அதை பெரிதாக எண்ணிப் பெருமைப்படாதே!
ஓரே “வுழூ” சுத்தத்தோடு பத்துநாட்கள் இருந்தால் போதும் உனக்குப் பொருமைதானாக வந்துவிடும். அதை நண்பர்களிடம் கூறி பெருமைப்படுகிறாய். அவ்லியாற்களில் பலர் ஒரே “வுழு”வுடன் பல மாதங்கள் இருந்துள்ளார்களே! இது உனக்குப் புரியுமா? ஒரே இரவில் நூறு “றக்அத்” தொழுதால் போதும் பெருமை தானாக வந்துவிடும். அதைப் பலரிடம் கூறிப் பெருமைதானாக வந்துவிடும்.
அதைப் பலரிடம் கூறிப் பெருமையடைகின்றாய். அவ்லியாக்களில் பலர் பல வருடங்கள் தொடராக இரவெல்லாம் நின்று வணங்கியுள்ளார்களே! இது உனக்குத் தெரியுமா? உன்னிலுள்ள பாவமென்ற அசுத்தத்தை அகற்றுவதற்காக “ஹஜ்” செய்யுமாறு உன்னை பணித்தான். நீயோ அதைச் செய்துவிட்டு பெருமைபேசிக் கொள்கிறாய். மற்றவர்களைக் காணும்போது அவர்களைப் பாவிகள் என்றும், உன்னை மகான் என்றும், எண்ணிக் கொள்கிறாய்.
எனவே நீ செய்த நற்கிரியைகளை நினைத்தோ, பிறரிடம் கூறியோ பெருமைப்படாதே. இப்லீஸ் என்பவன் இறைவனின் அருளிலிருந்து தூரப்படுத்தப்பட்டதற்கான காரணத்தை இங்கு நினைவு படுத்திக்கொள்.
அன்பு மகனே!
நீ ஒரு பாவத்தை செய்தபின் அதை நினைத்து அழுது. கண்ணீர் வடித்து பெரியார்கள் – வலீமாரிடம் சென்று நீ செய்த பாவத்தை அல்லாஹ் மன்னிப்பதற்காக அவர்களிடம் துஆ பிரார்த்தனை செய்யுமாறு கேள்!. இவ்வாறு நீ செய்தால் உனது முடிவு நல்ல முடிவாகுமென்பதை எதிர்பார்த்திரு.
அன்பு மகனே!
உலகில் பிரசங்கிகள் பலர் இருக்கின்றார்கள் வைத்தியர்களும் அவ்வாறே இருக்கின்றார்கள் மார்க்க அறிஞர்களும் அளவிடமுடியாத அளவு உள்ளனர். ஆனால் அல்லாஹ்வின்பால் போய்ச்சேரும் வழியையும் அவனைப்பற்றிய அறிவையும் “நப்ஸ்” உடைய தன்மைகளையும் “றூஹ்” உடைய விபரங்களையும் போதிப்பவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இருந்தாலும் கூட அவர்களைக் கண்டுகொள்ள முடியாதவகையில் மறைந்து வாழ்கிறார்கள். நீ முயற்சி செய்து அத்தன்மைகளைப் பெற்ற ஒருவரைக் கண்டால் உனது இருகரத்தாலும் அவரைப் பற்றி பிடித்து அவரை உனது ஆத்மீககுருவாக வைத்துக்கொள்.
அவரின் காலடியில் கிடந்து கரைசேர வழி தேடிக்கொள். இருளிலிருந்து ஒளியின்பால் உன்னை வழிநடாத்திச் செல்பவர் அவர்தான். உன்னிலுள்ள பெருவியாதிகளைக் குணப்படுத்தும் வைத்திய நிபுணரும் அவர்தான். அல்லாஹ்வின் அருள்வெள்ளம் உலகெல்லாம் பரவிக் கிடக்கிறது. அதை அள்ளி எடுத்துக்கொள். கடலின் நடுவில் நின்று கொண்டு தாகம் என்று சொல்லாதே! நீ உனது எதிர்காலம் பற்றி குறி சொல்பவனிடம் கேட்டறிகிறாய். ஆனால் உனது இல்லத்திலேயே குறிசொல்லும் வித்துவான்கள் இருவர் இருக்கின்றார்கள். அவர்களை நம்பாமல் ஷாத்தானை ஆசானாகக் கொண்ட குறிகாரனை நம்பிவாழ்கிறாய்.
உனது வீட்டிலுள்ள இரு வித்துவான்களும் உனது உடலுக்கு ஏற்படுபவைகளையும், உள்ளத்திற்கு ஏற்படுபவைகளையும் விபரமாகக்கூறும் சக்தி பெற்றவர்களாவர். அவர்களில் ஒருவர் அல்குர்ஆனும் மற்றது அல்ஹதீது.
அன்பு மகனே!
“கல்பு” உள்ளத்தின் நிலமைகளையும், “நப்ஸ்” ஆத்மாவின் நிலமைகளையும் அறிந்து அமல் செய்பவருக்கே வலீ ஒலித்தனம்முள்ளவர் என்று சொல்லப்படும். இந்நிலை அடையப்பெறாத ஒருவர் எவ்வளவு அற்புதங்காட்டினாலும். அவரை “வலீ” என்று அழைக்காதே! நம்பாதே! எனவே அவர் பற்றி முதலில் முழுமையாக அறிந்துகொள்! அவர் மேற்கண்ட தன்மையுடையவராக இருந்தால் மட்டும் அவரிடம் இறைவன் பற்றிய ஞானங்களை அறிந்து கற்றுக்கொள்! மாறாக மக்களை ஏமாற்றி பணம் கறக்கும் குருக்களை நம்பாதே!. அவர்கள் வழிகேட்டையே உனக்குக் காட்டித்தருவார்கள்.
மண் வியாபாரியிடம் மாணிக்கத்தின் விலையைக் கேட்காதே! அவனுக்கு அது தெரியாது மக்களை ஏமாற்றி வாழும் குருக்களை கண்டறிய சில அடையாளங்கள் இங்கு தருகின்றேன். அவற்றைக் கொண்டு யார் உண்மையான குரு யார் போலிகுரு என்று நீ அறிந்து கொள்ளலாம்.
மக்களை ஏமாற்றி வயிறுவளர்க்கும் குரு “ஷரிஅத்” மார்க்க சட்டங்களுக்கு மாறு செய்துகொண்டிருப்பார், அந்நிய பெண்களை திரையின்றி பார்ப்பார், அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வார், மதுபானமருந்துவார், இதன் மயக்கத்தில் இறைவனைக் காண்கிறேன் என்பார், தொழமாட்டார், தொழுகை எதற்கு இறைநினைவிருந்தால் போதுமென்பார், பொய் சொல்வார், புறம் பேசுவார், வாயில் வந்ததெல்லாம் ஞானமென்பார். “மஜ்துப்”போல் நடிப்பார். மங்கை மொகமுள்ளவராயிருப்பார், பணவாசை பதவி மோகமுள்ளவராயிருப்பார், பிறர் தன்னை கௌரவிக்கவேண்டுமென்று விரும்புவார்.
பொறாமை, பெறுமை, எரிச்சல் போன்ற தீக்குணமுள்ளவராயிருப்பார். இத்தன்மையுள்ளவரைக் கண்டு ஏமாந்து போகாதே! அவரின் கரம் பற்றி கரைசேர எண்ணாதே! அவருக்கு ஷேகு என்ற சொல்லைக்கூட பயன்படுத்தாதே! இன்று போலிக்குருக்கல் மலிந்து விட்டனர். நாடெங்கும் பரவி விட்டனர். “தல்ஸமாத்” கலையின் சில நுட்பங்களைத் தெரிந்து கொண்டும், ஜின், ஷைத்தான் போன்றவற்றை வசப்படுத்திக் கொண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். பாமரர்களும் அவர்களின் மாயாஜாலத்தையும், கண்கட்டி வித்தையையும் “கறாமத்” என்றெண்ணிக் கொண்டு ஏமாந்து விடுகிறார்கள். “ஷரீஅத்”தைக் கைவிடுகின்றனர். தொழுகை பற்றி அவர்களிடம் சொன்னால் அது என்ன சாமான் என்று கேட்கின்றனர். நோன்பு பற்றி அவர்களிடம் சொன்னால் அது ஒரு கிலோ எவ்வளவு என்று கேட்கின்றனர்.
உண்மையான குரு தான் தொழுகையை விட்டு நடக்கவுமாட்டார், தனது சிஷ்யர்களைத் தொழவேண்டாமென்று சொல்லவும் மாட்டார். ஆனால் உண்மையான “மஜ்தூப்” தன்ணுனர்விழந்திருக்கும்போது தோழாமலிப்பார். ஆனால் பிறரை தொழவேண்டாமென்று சொல்ல மாட்டார். ஆயினும் சுயநினைவுள்ள ஏனையோர் அவரை பின்பற்றி செயற்படுதல்கூடாது.
அன்பு மகனே!
ஒரு உண்மையான “வலீ”க்கு வானமும், புமியும் மரியாதை செய்யுமென்பது ஞானிகள் கருத்து. எதிர்பாராமல் இவ்வுலக இன்ப சுகங்கள் உனக்குக் கிடைத்தால், அதற்காக சந்தோசமடைந்து விடாதே! நீ அதற்காக சந்தோசமடைந்தால் உன்னைப்போல் அறிவிலி உலகிலிருக்க மாட்டான் என்றே சொல்ல வேண்டும். இவ்வுலக இன்ப சுகம் உனக்குக் கிடைக்காததிற்காக நீ கவலைப்படவும் வேண்டாம். அதற்காக நீ கவலைப்பட்டால் முன்பு கூறிவனைவிடவும் நீ கீழ்தரமானவனே.
ஏனெனில், “துன்யா” இவ்வுலகம் ஒரு விஷப்பாம்பு அது உன்னை அனுகி தீண்டாமல் போனதிற்காக நீ கவலைப்பட்டால் நீ யார்? மடையனா? புத்திக்காரனா? நீ ஒர் அறிவிலி என்பதற்கு பல அடையாளங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கவலைப்படத் தேவையற்ற விடயத்திற்கு கவலைப்படுவதும், கவலைப்பட வேண்டிய விடயத்திற்கு கவலைப்படாமலிருப்பதுமாகும்.
அன்பு மகனே!
தினமும் காலையில் எழுந்தவுடன் உனது வியாபாரத்தைப் பற்றி சிந்திக்கின்றாய்! அதிகாலையில் உன்னைச் சந்திக்கும் நண்பனும் வியாபாரமென்ற சிந்தனைதான். அது உனக்கு சாதகமாக அமையுமென்று விளங்கினால் மகிழ்ச்சியடைகின்றாய். அது பாதகமாக அமையுமென்று விளங்கினால் கவலையடைகிறாய். மகிழ்ச்சியடைய வேண்டியதும் , கவலைப்பட வேண்டியதும் இதுவல்ல.
தொடர்ந்து வரும்...
(இவ்வுரை தொடராக 2002ம் ஆண்டு இலங்கையில் அகில இலங்கை இஸ்லாமிய மெஞ்ஞானப் பேரவையினால் வெளியிடப்பட்ட அல்மிஷ்காத் ஞான சஞ்சிகையில் வெளிவந்ததாகும்.)