முஹர்ரம் மாதம் நினைவு கூறப்படவேண்டிய ‘ஸிப்துர் றசூல்’ இமாம் ஹூசைன் (றழி) அவர்கள்
மௌலவீ. அப்துல் மஜீட் (றப்பானீ)
நபி (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரும் இஸ்லாத்தின் நான்காவது கலீபா அலி இப்னு அபித்தாலிப் கர்றமல்லாஹூ வஜ்ஹஹூ அன்னை பாத்திமா றழி அவர்களின் அன்புப் புதல்வரும், இமாம் ஹஸன் (றழி) அவர்களின் அருமைச் சகோதரருமாகிய இமாம் ஹூசைன் இப்னு அலி இப்னு அபீத்தாலிப் (றழி) அவர்கள் புனித முஹர்ரம் மாதத்தில் நினைவு கூறப்படவேண்டியவர்களில் அதிவிசேடமானவர்கள்.
இவர்கள் ஹிஜ்ரி நாலாம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை ஐந்தில் மதீனா முனவ்வராவில் பிறந்தார்கள்
இவர்கள் பிறந்தபோது நபி (ஸல்) அவர்கள் தங்களின் அருள் நிறைந்த உமிழ்நீரை ஹூசைன் றழி அவர்களின் வாயில் வைத்து சுவைக்கச் செய்தார்கள் அவர்களின் காதில் பாங்கு சொன்னார்கள் அவர்களின் வாயில் உமிழ்ந்தார்கள் அவர்களுக்காக துஆப்பிராத்தனை செய்தார்கள் அவர்கள் பிறந்து ஏழாவது நாளில் அவர்களுக்கு ஹூசைன் – சின்ன அழகர் என்று பெயரிட்டார்கள்.
அதே நாளில் அவர்களுக்காக ஒர் ஆட்டையருத்து அகீகஹ் கொடுத்தார்கள். தங்களின் அன்புப் புதல்வி பாத்திமாவையழைத்து ஹுசைனுடைய தலை முடியைச் சிரைத்து அதை நிறுத்து அதன் நிறைக்கேற்ப வெள்ளியை ‘ஸதகஹ்’ வாக கொடுங்க்ள என்று கூறினார்கள்.
ஹூசைன் றழி அவர்கள் மீது நபி (ஸல்) அவர்கள் அதிக அன்பும், இரக்கமும் கொண்டவர்களாக இருந்தார்கள் அதேபோன்று அவர்களின் சகோதரர் ஹசன் (றழி) அவர்கள் மீதும் அதிக அன்பு, இரக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள் இவ்விருவரைப்பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
ஒரு முறை இவ்விருவரைப்பற்றியும் நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறுகையில் ‘அல் ஹஸனு வல் ஹுசைனு செய்யிதா ஷபாபி அஹ்லில் ஜன்னஹ்’ ஹசனும் ஹுசைனும் சுவர்கத்திலுள்ள வாலிபர்களின் தலைவர்கள் என்று கூறினார்கள்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்களிடம் உங்களுடைய குடும்பத்தினரில் உங்களுக்கு மிக விருப்பமானவர்கள் யார்? என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் ஹசனும், ஹூசைனும் என்று கூறினார்கள். (ஆதாரம்-திர்மிதி)
இவ்வாறு இவ்விரு சகோதரர்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்பங்களில் புகழ்ந்து கூறியுள்ளார்கள்
ஆயினும் இவ்விருவரில் இமாம் ஹுசைன் (றழி) அவர்கள் முஹர்ரம் மாதத்தில் நினைவு கூறப்படுவது விசேட அம்சமாகும். இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் மக்கள் அவர்கள் மீது விழா எடுப்பார்கள். அவர்கள் பேரில் மௌலித் ஓதுவார்கள், அவர்கள் பேரில் அன்னதானம் வழங்குவார்கள் அவர்களைக் கொண்டு தங்களின் தேவைகள் நிறைவேற இறைவனிடம் வஸீலஹ் தேடுவார்கள்.
இவ்வாறு இவர்கள் முஹர்ரம் மாதத்தில் நிறைவு கூறப்படுவதற்கு காரணம், இம்மாதம் 10ம் நாள் அன்றுதான் ஹுசைன் (றழி) அவர்கள் எதிரிகளால் கொலைசெய்யப்பட்டு ஷஹிதானார்கள். எனவேதான் இந்த நாளை மக்கள் நினைவு கூறுகின்றார்கள்.
இமாம் ஹுசைன் (றழி) அவர்கள் அபூ அப்தில்லாஹ் என்ற புனைப் பெயர் கொண்டு அழைக்கப்படார்கள் அதேபோல் அர்ரஸீது – நேர்வழி பெற்றவர். அத்தையிப் –மணம் நிறைந்தவர் அஸ்ஸகிய்யு- தூய்மையானவர் அல்வபிய்யு-நிறைவேற்றி வைக்கக்கூடியவர் அஸ்ஸெய்யித்- தலைவர், அல்முபாறக்- அருள்செய்யப்பட்டவர், அஸ்ஸிப்து-பேரர் போன்ற இன்னும் பல பட்டப் பெயர்கள் கொண்டும் அழைக்கப்பட்டார்கள். இவற்றில் “அஸ்ஸகிய்யு” என்ற பட்டப்பெயர் மிகவும் பிரசித்திபெற்றதாகும்.
இமாம்- ஹுஸைன் (றழி) அவர்கள் தனது சகோதரர் ஹஸனைப் போன்று அழகானவர்களாகவும். பெரியாரை மதிக்கக் கூடியவர்களாகவும், மார்க்கப்பற்று நிறைந்தவர்களாகவும் காணப்பட்டார்கள்.
வஹ்ததுல் வுஜூது உள்ளமை ஒன்ற என்ற கலிமாவின் தத்துவத்தை மக்கள் மத்தியில் பரப்புவதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் வபாத்தின் பின் ஸஹாபாக்களில் பெரும்பான்மையினர் உலகில் பல நாடுகளுக்கும் சென்று இஸ்லாத்தின் தத்துவத்தைப் பரப்புவதில் ஈடுபட்டனர் – இமாம் ஹூசைன் (றழி) அவர்கள் மக்கஹ்வில் தங்கி இறைஞானத்தைப் பரப்புவதில் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில் இராக் நாட்டின் கூபா நகரில் மார்க்கப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஆவியா (றழி) அவர்கள் மரணமானார்கள் இதனால் கூபா நகர மக்கள் தங்களுக்கு ஒரு மார்க்க வழிகாட்டி வேண்டுமென்று கருதி, அங்குள்ள ஒர் இடத்தல் ஒன்று சேர்ந்தார்கள் தங்களுக்கிடையில் அலோசனை நடத்தினார்கள் இறுதியில் மக்கா நகரில் வாழ்ந்துகொண்டிருந்த நபி பேரர் ஹுசைன் (றழி) அவர்களுக்கு ஒர் கடிதம் எழுதி அவர்களை கூபா நகருக்கு வரவழைப்பதாக முடிவு செய்தார்கள்.
கூபா நகரமக்கள் ஒன்று சேர்ந்து இமாம் ஹுசைன் (றழி) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள் அதில் “அல்லாஹுடைய துதரின் பேரரே! கூபா நகர மக்கள் உங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லாஹூத்தஆலா உங்களைக் கொண்டு எங்கள் அனைவரையும் சத்தியத்தின் மீது ஒன்று சேர்ப்பானாக. உங்களைக் கொண்டு இஸ்லாத்தை பலப்படுத்துவனாக! எனவே நீங்கள் விரைந்து வாருங்கள்” என்று குறிப்பிட்டார்கள்.
கூபா நகர மக்களிடமிருந்து கடிதத்தை பெற்றுக் கொண்ட இமாம் ஹுசைன் றழி அவர்கள் அதற்கு பதில் எழுதினார்கள் அதில் அவர்கள் “உங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது உங்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டேன் இப்பொழுதுள்ள சூழலில் என்னால் அங்கு வர முடியாது எனவே எனக்கு பதிலாக எனது நம்பிக்கைக்குரியவரும் எனது சாச்சாவின் மகனுமாகிய முஸ்லீம் இப்னு அக்கீலை உங்கள் மத்தியில் அனுப்பிவைக்கிறேன்”. அவரைக் கொண்டு நீங்கள் நேர்வழி பெற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார்கள்.
எனவே இமாம் ஹுசைன் றழி அவர்கள் முஸ்லீம் இப்னு அக்கீல் றழி அவர்களை கூபா நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.
முஸ்லீம் இப்னு அக்கீல் றழி அவர்கள் இறாக் நாட்டின் கூபஹ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள். முஸ்லீம் இப்னு இறாக் நாட்டின் கூபஹ் தேசத்திற்கு சென்று அங்குள்ள மக்களுக்கு பைஅத் வழங்கினார்கள் அந்த மக்கள் இமாம்
ஹூசைன் றழி அவர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் இப்னு அக்கீல் றழி அவர்களிடம் பைஅத் பெற்றுக் கொண்டார்கள்.
முஸ்லிம் இப்னு அக்கீல் றழி அவர்களை கூபா நகருக்கு அனுப்பி வைத்த இமாம் ஹுசைன் றழி அவர்கள் மக்கா நகரில் சிறிது காலம் தங்கினார்கள். பின்னர் கூபா நகருக்குச் சென்று தனது சாச்சாவின் மகன் முஸ்லீம் இப்னு அக்கீல் றழி அவர்களுடன் இணைந்து கொள்ள முடிவு செய்தார்கள்.
எனவே மக்காவிலிருந்து ஹிஜரி 60 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் பிறை 08ல் செவ்வாய்கிழமை அன்று கூபா நகரை நோக்கி புறப்பட்டார்கள் அவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் முரீதீன்கள் அடிமைகள் உட்பட மொத்தம் 82 பேர் சென்றதாக அவர்களின் வரலாற்றில் கூறப்படுகின்றது.
மக்காவிலிருந்து புறப்பட்ட இமாம் ஹுசைன் றழி அவர்களும் அவர்களின் முஹிப்பீன்களும் “தஃலியிய்யாஹ்” என்ற இடத்தை அடைந்தபோது அங்கு சற்று ஓய்வெடுத்தார்கள் அங்கே தனது சாச்சாவின் மகன் முஸ்லிம் இப்னு அகீல் (றழி) அவர்கள் கூபா நகரில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற துயர் மிக்க செய்தி இமாம் ஹுசைன் றழி அவர்களுக்கு எட்டியது மிகவும் கவலையடைந்தார்கள்.
இந்தச் செய்தியை கேள்வியுற்ற அவர்களின் முஹிப்பீன்களில் சிலர் கூபா நகருக்கு செல்லவேண்டாம் என்று இமாம் ஹுசைன் (றழி) அவர்களை தடுத்தார்க்ள ஆனால் அதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கூபா நகரை நோக்கி தனது பிரயாணத்தை தொடர்ந்தார்கள் வழியில் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள்.
இறுதியில் ஈராக் நாட்டின் கர்பலா என்ற இடத்தை வந்தடைந்தார்கள் இவர்களின் வருகையை அறிந்த எதிரிகள் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டார்கள் இறுதியில் ஹிஜ்ரி 61 ஆண்டு முஹர்ரம் மாதம் 10ம் நாள் வெள்ளிக்கிழமை இமாம் ஹூசைன் றழி அவர்கள் இராக் நாட்டின் கர்பலா என்ற இடத்தில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார்கள். இவர்களை சினான் இப்னு அனஸ் என்பவன் கொலை செய்ததாக இவர்களின் வரலாற்றில் கூறப்படுகின்றது.
இவர்களை எதிரிகள் கடுமையாக தாக்கினார்கள் இவர்கள் கொலை செய்யப்பட்டபோது இவர்களின் புனித உடலில் 33 இடங்களில் ஈட்டியினால் எய்யப்பட்ட காயங்களும் 33 இடங்களில் வாலினால் வெட்டப்பட்ட காயங்களும் காணப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள்.
இமாம் ஹுசைன் றழி அவர்கள் கொலை செய்யப்பட்டபோது அவர்களின் உடல் வேறாகவும் தலை வேறாகவும் ஆக்கப்பட்டது இவர்களின் புனித உடல் இராக் நாட்டின் கர்பலா என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற புனித றவ்ழாஹ் ஷரீபாவை உலகெங்கும் வாழும் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் தினமும் ஸியாரத் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் தலையை வேறாக்கிய எதிரிகள் அதைக்கொண்டு உலகெங்கும் சுற்றினர். இவர்களின் அருள் நிறைந்த தலை எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடுண்டு.
இவர்களின் தலை பலஸ்தீன் நாட்டின் அஸ்கலான் என்ற இடத்துக்கு கொண்டுவரப்பட்டபோது அவ்விடத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த அரசன் அங்கேயே ஹுசைன் றழி அவர்களின் தலையை நல்லடக்கம் செய்ததாக இமாம்களில் சிலர் கூறுகின்றார்கள்.
இப்னு பகர், அல் அல்லாமா, ஹமதானி போன்ற இன்னும் சில இமாம்கள் அவர்களின் அருள் நிறைந்த தலை அவர்களின் தாய் அன்னை பாத்திமா (றழி) சகோதரர் ஹசன் (றழி) அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற ஜன்னத்துல் பகீஇல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றார்கள்.
இமாம் அப்துல் வஹாப் அஷ் ஷஹரானி அவர்கள் தங்களின் தபகாத்துல் அவ்லியா என்ற அறபு நூலில் ஹுசைன் றழி அவர்கள் பற்றி கூறும்போது அவர்களின் புனித தலை கிழக்கு தேசத்திலுள்ள ஒர் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றார்கள்.
இவ்வாறு இமாம் ஹுசைன் றழி அவர்களின் தலை எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு.
இவ்வாறு இஸ்லாத்தின் பாதையிலே கொலை செய்யப்பட்ட இமாம் ஹுசைன் றழி அவர்கள் புனித முஹர்ரம் மாதத்தில் நினைவு கூறப்படவேண்டியது விசேட அம்சமாகும்.
புனித முஹர்ரம் மாதத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்ட காரணத்தினால்தான் சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் அவர்களை நினைவு கூறுகிறார்கள் அவர்கள் பேரில் மௌலித் ஒதுகின்றார்கள், அவர்கள் பேரில் அன்னதானம் வழங்குகின்றார்கள். இமாம் ஹுசைன் (றழி) அவர்களே முன்வைத்து செய்யப்படுகின்ற ஒவ்வொறு காரியமும் சிறப்பாக முடியும் அவர்களை ஒவ்வொறுவரும் நேசிக்கவேண்டும் காரணம் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இமாம் ஹுசைன் (றழி) அவர்களை ஒவ்வோரு முஃமினும் நேசிக்கவேண்டும் நேசம் நிச்சயம் பிரயோசனம் அளிக்கும். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்
“ஹூசைன் என்னில் நின்றும் உள்ளவர் நான் ஹுசைனில் நின்றும் உள்ளவர்,இறைவா! ஹூசைனை நேசிக்கக் கூடியவர்களை நீ நேசிப்பாயாக. ஹூஸைன் பேரர்களில் நின்றும் ஒரு பேரர்”. (ஆதாரம்-துர்முதீ)
பறா இப்னு ஆஸிப் றழி அவர்கள் கூறுகின்றார்கள் – நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோளில் ஹுஸைன் (றழி) அவர்களை சுமந்தவன்னம் வருவதைக் கண்டேன் அப்பொழுது அவர்கள் “இறைவா! நான் ஹுசைனை நேசிக்கின்றேன் நீயும் அவரை நேசிப்பாயாக!” என்று கூறினார்கள்.
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் இருந்து ஹுஸைன் (றழி) அவர்கள் மீது முஹப்பத் நேசம் வைப்பதன் அவசியம் தெளிவாகின்றது.