"ஸபர் மாதம் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றைச் சுயமாக ஏற்படுத்துமென்று கொள்ளுதல் பிழையானதாகும். அதாவது. “ஷிர்க்” என்ற இணைவைத்தலை ஏற்படுத்தக் கூடியதாகும். ஏனெனில் அல்லாஹ் தவிர சுயமாகச் செய்தவற்கு எவருக்கும் எதற்கும் சக்தி இல்லவே இல்லை. இதுவே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாகும்."
அதி சங்கைகுரிய ஷெய்குனா அல்ஹாஜ் ஏ.அப்துர் றஊப் மிஸ்பாஹி, பஹ்ஜீ
இம்மாதம் 25.01.2012 அன்று ஒடுக்கத்து புதன் கிழமையாகும்
- ஒடுக்கத்துப் புதன் இஸ்ம் உள்ளே..

இந் நாளில் வாழை இலையில் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை உடலில் குறிப்பாக தலையில் தேய்த்து குளிக்கும் வழக்கமும் தொண்டு தொட்டு முஸ்லீம்களிடம் குறிப்பாக இந்திய இலங்கை முஸ்லீம்களிடம் இருந்து வந்தது.
இவ்வழக்கம் இருந்து வந்த காலத்தில் இமாம்கள் போல் திறமையும் அறிவு முதிர்ச்சியும் பெற்றிருந்த மார்க்க அறிஞர்கள் பலர் இருந்தும்கூட அவர்களில் எவரும் இவ்வழக்கம் இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானது என்றோ பித்அத் என்றோ, மூட நம்பிக்கை என்றோ சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை.
வெள்ளிக்கிழமை மின்பர் மேடையில் முழங்கியதுமில்லை. மாறாக அவர்களும் இவ்வழக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளார்கள். ஆயினும் சமீப காலத்தில் படித்துப் பட்டம் பெற்ற சிலர் இவ்வழக்கம் “ஹறாம்” என்றும், “பித்அத்” என்றும், மூட நம்பிக்கை என்றும் பேசியும், எழுதியும், மின்பர் மேடையில் முழங்கியும் வருகின்றார்கள்.
எனவே, இது பற்றி திருக்குர்ஆனும், நபீ மொழிகளும், இஸ்லாமிய அறிஞர்களான இமாம்களும் தெரிவித்துள்ள தகவல்களை இங்கு சுருக்கமாகத் தருகின்றோம்.
இமாம்களையும் மகான்களையும் தூக்கி எறிந்துவிட்டும், அவர்களால் எழுதப்பட்ட நூல்களை புறக்கணித்துவிட்டும் தமக்கு குர்ஆனும் ஹதீதும் போதும் என்று சொல்பவர்களுக்கு இப்பிரசுரம் இனிக்கவும் மாட்டாது, மணக்கவும் மாட்டாது.
கழுதைக்கு குங்குமம் மணப்பதில்லை என்பது பெய்யா மொழி.
கண்டதெற்கெல்லாம் திருக்குர்ஆனில் இருந்தும், ஹதீதிலிருந்தும் நேரடியான தெளிவான ஆதாரம் கேட்டு ஒற்றைக்காலில் நிற்போர் “இல்முல் இல்ஹாம்” “இல்முல் லதுன்னி” என்று ஒரு வகை அறிவுண்டு என்பதையும் சிந்தனையில் கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு அறிவுண்டு என்பது திருகுர்ஆனின் ஆதாரம் கொண்டும், சரியான ஹதீதுகளின் ஆதராரம் கொண்டும் நிறுவப்பட்ட விடயம் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும் நபீமார்களுக்கு “வஹீயும்” இருந்தது “இல்ஹாம்” என்ற அறிவும் இருந்தது ஆனால் நபீமார் அல்லாத வலீமார், நல்லடியார்களுக்கு இல்ஹாம் மட்டும் இருந்தது இதை யாரும் மறுக்க முடியாது.
ஒருவர் ஒரு விடயத்தைச்சொல்கிறார் என்றுவைத்துக் கொள்வோம் அவரிடம் நீங்கள் சொல்வதற்கு திருகுர்ஆனிலும், ஹதீதிலும் ஆதாரம் உண்டா? என்று கேட்கும்போது அது எனக்குத் தெரியாது, ஆனால் இதை எனது இல்ஹாம் என்ற அறிவின் மூலம் சொன்னேன் என்று அவர் சொல்வாறாயின் அவரை ஏற்றுக் கொள்வதா? அல்லது இல்ஹாமும் கத்தரிக்காயும் என்று கூறி அவரைத் தூக்கி எறிவதா? அவரை தூக்கியறிந்தால் திரு குர்ஆனும், நபீ மொழிகளும் கூறுகின்ற இல்ஹாம் என்ற அறிவை தூக்கியெறிந்ததாகிவிடும்.
ஆகையால் அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும் ஏற்றுக் கொள்வதாயினும் கண்னை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள முடியாது அவரை “ஷரீஅத்” என்ற தராசில் நிறுத்துப் பார்க்க வேண்டும் அவரின் கொள்கையும் நடவடிக்கைகளும் ஷரீஅத்திற்கு முரணில்லாதிருந்தால், அவர் ஒரு நல்லடியார் என்று பரவலாக அறியப்பட்டவராக இருந்தால், அவர் சொன்ன விடயம் ஷரீஅத்திற்கு முரணில்லாதிருந்தால் அவரின் பேச்சை ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி அவரை தூக்கியெறிந்துவிடலாகாது.
இந்த அடிப்படையில் ஒடுக்கத்துப்புதன் தொடர்பாக வலீமார்களும், இறைஞானிகளும் கூறியுள்ள கருத்துக்களை சிந்தனையிற் கொண்டு செயல்பட வேண்டும்
ஸபர் மாதம் மிடிமைக்குரிய மாதமா?
ஸபர் மாதம் மிடிமைக்குரிய மாதம் என்ற அபிப்பிராயம் நபீ (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன் வாழ்ந்த மக்களிடமும் இருந்தது. இது ஒரு தவறான அபிப்பிராயமாகும். இதனால்தான் நபீ (ஸல்) அவர்கள்
لَا عَدْوَى وَلاَ طيَرَةَ وَلاَ هَامَةَ وَلَاصَفَرَ فى اْلأسْلَامْ
“இஸ்லாம் மார்க்கத்தில் தொற்று நோய், பறவை ஜாதகம், ஆந்தை (பக்கிள்) கத்துவதால் மரணம் நிகழ்தல், ஸபர் மாதம் மிடிமைக்குரியது என்பன இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை” என்று அருளினார்கள்.
இதன் கருத்து ஸபர் மாதம் மிடிமைக்குரிய மாதம் இல்லை என்பதாகும். ஆயினும் அல்லாஹ் நாடினால் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றை ஸபர் மாதத்திலும் தருவான். ஏனைய மாதங்களிலும் தருவான்.
ஆயினும் ஸபர் மாதம் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றைச் சுயமாக ஏற்படுத்துமென்று கொள்ளுதல் பிழையானதாகும். அதாவது. “ஷிர்க்” என்ற இணைவைத்தலை ஏற்படுத்தக் கூடியதாகும். ஏனெனில் அல்லாஹ் தவிர சுயமாகச் செய்தவற்கு எவருக்கும் எதற்கும் சக்தி இல்லவே இல்லை. இதுவே ஒரு முஸ்லிமின் நம்பிக்கையாகும்.
“லா ஸபர பில் இஸ்லாம்”. என்ற வசனம் இக்கருத்தையே வலியுறுத்துகிறது. தவிர ஸபர் மாதம் எவருக்கும் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவை வராதென்பது கருத்தல்ல.
நாட்களில் கெட்டநாள் உண்டா?
அல்லாஹ் படைத்த ஏழு நாட்களில் கெட்டநாள் மிடிமை, கஷ்டம், நோய் போன்றவற்றிற்கான நாள் உண்டு என்பதற்கு திருகுர்ஆனில் ஆதாரம் உள்ளது.
إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر
நிச்சயமாக நாம் அவர்கள் மீது “ஆத்” கூட்டதினர் மீது “நஹ்ஸ்” உடைய நாளில் கடுமையான காற்றை அனுப்பிவைத்தோம்.
திருகுர்ஆன் கமர் அத்தியாயம் வசனம் 101
فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات
நிச்சயமாக நாம் அவர்கள் மீது “நஹ்ஸ்” உடைய நாட்களில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம்
திருகுர்ஆன் புஸ்ஸிலத் அத்தியாயம் வசனம் 16
மேற்கண்ட இரு வசனங்களிலும் முன் வாழ்ந்த கூட்டங்களுக்கு அல்லாஹ் கடும் காற்றை அனுப்பி அவர்களைத் தண்டித்ததாகக் கூறியுள்ளான். மேற்கண்ட இரு வசனங்களில் முந்தின வசனத்தில் “நஹ்ஸ்” என்ற சொல் ஒருமையாகவும், இரண்டாம் வசனத்தில் பன்மையாகவும் வந்துள்ளது. இச் சொல்லுக்கு தீமை, மிடிமை, தரித்திரம் போன்ற அர்த்தங்கள் உள்ளன.
மேற்கண்ட இரு வசனங்கள் மூலம் “நஹ்ஸ்” உடைய நாள் என்று ஒன்று உண்டு என்பது தெளிவாகின்றது. அந்த நாள் எது என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.
அதோடு அந்த நாள் எந்த மாதத்தில் உள்ள நாள் என்பதிலும் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. இவ்விபரத்தை சரியாக அறிந்து கொள்வதாயின் “ஆத்” கூட்டதினருக்கு அல்லாஹ் பயங்கரக் காற்றை அனுப்பிய மாதம், நாள் பற்றித் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் .
இதில் கூட வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு எனினும் இது தொடர்பாகச் சொல்லப்பட்டுள்ள பலரின் கருத்தையும் இங்கு தருகின்றோம்.
அந்த நாள் புதன் கிழமைதான் என்று அநேக அறிஞர்கள் கருத்து கூறியுள்ளார்கள். ஆயினும் அவர்கள் எந்த மாதம் என்பது பற்றி தெளிவாகவும், திட்டவட்டமாகவும் ஒன்றும் சொன்னதாகக் காணவில்லை.
தப்ஸீர் ரூஹுல் மஆனி ஆசிரியர் அவர்கள் தங்களின் மேற்கண்ட விரிவுரை நூல் 27ம் பாகம் 119ம் பக்கத்தில் அது ஷவ்வால் மாதப் பிற்பகுதியில் உள்ள புதன் கிழமை என்று கூறியுள்ளார்கள்.
அல்லாமா வகீஉ (றஹ்) அவர்கள் “குறர்” என்ற நூலில் ஒவ்வொரு மாத்தின் கடைசிப் புதன்கிழமை “நஹ்ஸ்” உடைய நாள் என்று நபீ ஸல்) அறிவித்துள்ளதாக இப்னு அப்பாஸ் (றழி) அவர்களைத் தொட்டும் வந்துள்ள நபீ மொழியை இப்னு மர்தவைஹ் (றஹ்) அவர்களும் அல்ஹதீபுல் பக்காதீ (றஹ்) அவர்களும் அறிவித்துள்ளதாக எழுதியுள்ளார்கள்.
இமாம் தபறானீ (றஹ்) அவர்கள் அந்த நாள் புதன் கிழமையென்று தங்களின் தபறானீ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஆயினும் மேற்கண்ட இரு நபீ மொழிகளையும் அபு ஹாதம், இப்னுல் ஜவ்ஸி, இப்னு றஜப், ஸகாவீ ஆகியோர் “ழயீப்” பலம் குறைந்தவை என்று கூறியுள்ளார்கள்.
புதன் கிழமை “நஹ்ஸ்” உடைய நாள் என்று தகவல்கள் இருப்பதுபோல் அது நல்ல நாள் என்றும் தகவல்கள் உள்ளன. மின்ஹாஜுல் ஹுலைமீ , ஷுஅபுல் பைஹகீ ஆகிய இரு நூல்களிலும் புதன் கிழமை மதிய நேரத்தின் பின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இமாம் புர்ஹானுல் இஸ்லாம் (றஹ்) அவர்கள் ஹிதாயா என்ற நூலில் வந்துள்ளதாக தங்களின் “தஃலீமுல் முதஅல்லிம்” என்ற நூலில், புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என்றும் அன்றுதான் அல்லாஹ் ஒளியைப்படைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள் இதனால்தான் பெரியோர்கள் ஹஸ்ரத்மார்கள் கல்வி சம்பந்தமான வகுப்புக்களை புதன் கிழமையில் தொடங்கி வந்துள்ளார்கள். அதோடு புதன் கிழமை கல்விக்குரிய நாள் என்றும் பரவலாகக் கணிக்கப்படுகின்றது.
எவனாவது புதன்கிழமை மரங்களை நட்டி “ஸுப்ஹானல் பாஇதில் வாரிதி” என்று சொல்வானாயின் அது அவனுக்கு காய் கனிகளைக் கொடுக்கும் என்ற ஜாபிர் (றழி) அவர்கள் அறிவிக்க இப்னு ஹிப்பான் (றஹ்) அவர்களும் தைலமி (றஹ்) அவர்களும் தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த நபீமொழியை ஆதாரமாகக் கொண்டு பெரியோர்கள் செயல் பட்டு வந்துள்ளார்கள்.
புதன் கிழமை ‘நஹ்ஸ்” உடைய நாள் என்பதற்கான சில தகவல்களை இங்கு தருகின்றோம். எமது உம்மத்துக்கள் வெறுக்க மாட்டார்கள் என்றிருந்தால் புதன் கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் பணித்திருப்பேன் என்று நபீ ஸல் அவர்கள் கூறியதாக ஆயிஷா (றழி) அறிவித்துள்ளார்கள். இந்த நபீ மொழி பிர்தௌஸ் என்ற நூலில் பதிவாகியுள்ளது.
வார நாட்களில் சனிக்கிழமை சூட்சி, துரோக்கத்துக்குரிய நாளாகும். ஞாயிற்றுக் கிழமை மரம் நடுதல், கட்டிடம் கட்டுவதற்குரிய நாளாகும். திங்கட்கிழமை பயணம் உழைப்புக்குரிய நாளாகும் செவ்வாய்க்கிழமை வன்மை, துக்கத்துக்குரிய நாளாகும்.
புதன் கிழமை கொடுக்கல் வாங்கலுக்குப் பொருத்தமற்ற நாளாகும். வியாழக்கிழமை தேவைகளைத் தேடுவதற்கும், அதிகாரிகளிடம் செல்வதற்கும் உரிய நாளாகும். வெள்ளிக்கிழமை திருமணப் பேச்சுக்கும் திருமணம் செய்வதற்கும் பொருத்தமான நாளாகும். என நபீ ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த நபீ மொழியை இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவித்ததாக அபூயஃலா (றஹ்) அவர்களும், அபூ ஸயீத் (றழி) அறிவித்ததாக இப்னு அதிய்யஹ் (றஹ்) அவர்களும் தமாம் (றஹ்) அவர்களும் அல் பவாயித் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
ஆயினும் ஸகாவீ (றஹ்) அவர்கள் இந்த நபீ மொழி பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். “வெண்குஷ்டம்”, “கருங்குஷ்டம்” இரண்டும் புதன் கிழமையில்தான் வெளியாகும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த நபீ மொழியை இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவித்துள்ளதாக இப்னு மாஜாஹ்வும், வேறு இரு வழிகளில் ஹாகிம் அவர்களும் பதிவு செய்துள்ளார்கள்.
புதன் கிழமை நகம் வெட்டுதல் கூடாது என்றும், அவ்வாறு செய்வதால் குஷ்டநோய் வரும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு நோயாளியிடம் குசலம் விசாரிக்கச் செல்வது நல்ல காரியமாயினும் அதை புதன் கிழமை தவிர்த்துக் கொள்ளுதல் நல்லதென்றும் தகவல்கள் கூறுகின்றன.
புதன் கிழமை முடிமைக்குரிய நாளாக கருதப்படுமென்றும், மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிகவும் கடுமையான மிடிமைக்குரிய நாள் என்றும் “அர்றவ்ழஹ்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிடிமைக்குரிய நாள் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (றழி) அறிவித்துள்ளார்கள்.
றூஹுல் பயான் என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூல், வால்யும் 09ம் பக்கம் 324ல் “புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து நீருடன் கலக்கப்படுவதால் அன்று குளிப்பது சிறந்தது” என்று கூறப்பட்டுள்ளது.
தண்டனை பெற்ற எந்தவொரு கூட்டமாயினும் அது புதன்கிழமையே தண்டிக்கப்பட்டுள்ளது. இத் தகவல் றூஹுல் பயான் வால்யும் 08 ,பக்கம் 328ல் இடம் பெற்றுள்ளது.
ஸபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமையில் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள், துன்பங்கள் இறங்குவதாகவும் வருட நாட்களில் அந்த நாள் ஒன்று மட்டுமே மிகவும் கஷ்டமான நாள் என்றும் இறைஞானிகள் சொல்லியிருப்பதாக “முஜர்றபாதுத்தைறபீ” என்ற நூல் 103ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது
அஷ் ஷெய்குல் காமில் பரீதுத்தீன் மஸ்ஊத் கன்ஞ்ஜே ஷகர் (றஹ்) அவர்கள் தங்களின் ஞானகுரு ஹாஜா முயீனுத்தீன் (றஹ்) அவர்களின் “அவ்றாத்” தொகுப்பில் பின்வருமாறு இருக்க தான் கண்டதாக குறியுள்ளார்கள்.
ஒவ்வொறு வருடமும் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள் துன்பங்கள் இறங்குகின்றன. அவை யாவும் ஸபர் மாத்தின் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன அந்த வருட நாட்களில் இந்நாள்தான் மிகவும் கஷ்டமானது அன்று யாராவது நான்கு “றக்அத்” தொழுது ஒவ்வொறு றக்அத்திலும் பாத்திஹா சூறா ஒதியபின் “இன்னாஅஃ தைனா கல் கவ்தர்” என்ற சூறத்தை 17 தரமும், “குல்குவல்லாஹ்வை” 05 தரமும்,
“குல் அஊது பிறப்பில் பலக்” ஒரு தரமும் “குல் அஊது பிறப்பின்னாஸ்” ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவான். பின்பு “ஸலாம்” என்ற சொல் கொண்டு துவங்கப்படுகின்ற திரு குர்ஆன் வசனங்களை பண்ணீர், கஸ்தூரி, குங்குமம் கொண்டு பீங்கானில் எழுதிக் குடிக்கவும் வேண்டும்.
பழாயிறுஷ்ஷுஹூரில் ஹிஜ்ரிய்யஹ் பக்கம் 33, 34
ஸபர் மாதம் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது சிறந்ததென்று அனேகர் அபிப்பிராயம் கூறுகின்றார்கள் என்றும்
من بشرني بخروج صفر أبشره با الجنة
“ஸபர் மாதம் முடிந்துவிட்டதென்று என்னிடம் சுபச் செய்தி சொல்பவனுக்கு சுவர்க்கத்தைக் கொண்டு நான் சுபச் செய்தி சொல்வேன்” என்று நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் ஹயாத்துல் ஹயவான் என்ற நூல் முதலாம் பாகம் 120ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
“இஆனதுத் தாலிபீன்” என்ற சட்டக்கலை நூலை எழுதியவரும், மக்காவில் பிறந்து திரு மதீனா நகரில் சமாதி கொண்டுள்ளவருமான அஷ்ஷையித் முகம்மத் ஷதா அத்திம்யாதி (றஹ்) அவர்கள் தங்களின் “நிஹாயத்துல் அமல்” என்ற சட்டநூல் 208ம் பக்கத்தில் ஒடுக்கத்துப் புதன் பற்றிக் குறிப்பிடுகையில்,
“ஒவ்வொறு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய்கள், கஷ்டங்கள், சோதனைகள் “லவ்ஹுல் மஹ்பூல்” பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்திற்கு ஸபர் மாத இறுதிப் புதன் அன்று இறக்கப்படுகின்றன”.
ஆகையால் கீழ் காணும் திரு வசனங்களைப் பாத்திரங்களில் எழுதி அதை தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு குறித்த சோதனைகள் ஏற்பட மாட்டாது என்று கூறியுள்ளார்கள்.
ஒடுக்கத்துப் புதன் கதையும் வாழை இலையில் “இஸ்ம்” எழுதிக் குடிக்கும், குளிக்கும் கதையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூட நம்பிக்கை என்று சொல்வோர் மேற்கண்ட நூலாசிரியர் மக்காவில் பிறந்து திருமதீனாவில் சமாதி கொண்டவர் என்பதை தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
ஒவ்வொறு மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும், குறிப்பாக ஸபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் “நஹ்ஸ்” மிடிமைக்குரிய நாட்கள் என்பதற்கான மேற்கண்ட ஆதாரங்கள் கொண்டும்,
நபீ (ஸல்) அவர்களுக்கு மரண வருத்தம் “ஸபர்” மாத்தின் இறுதிப் புதன் கிழமை ஆரம்பமானதை கருத்திற் கொண்டும் அன்றைய தினம் திருகுர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது வேறு பாத்திரத்திலோ எழுதி நோய், மிடிமை, கஷ்டம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் நோக்குடன் குடிப்பதை இஸ்லாமிய மூத்த அறிஞர்கள் நல்ல காரியம் எனக்கூறியுள்ளதால் இவ்வழக்கம் எந்த வகையிலும் “ஹறாம்” ஆகவோ “பித்அத்” ஆகவோ “ஷிர்க்” ஆகவோ மாட்டாது.
அருள்பெற நாடி திரு குர்ஆன் வசனங்களை அன்றைய தினத்திலோ வேறு தினத்திலோ குடிப்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. தேவையானோர் எம்முடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, ஸபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையான ஒடுக்கத்துப் புதன் கிழமை திருகுர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது காகிதம், பீங்கான் போன்றவற்றிலோ எழுதிக் கரைத்துக் குடிப்பதும், உடலில் தேய்த்துக் குளிப்பதும் “முபாஹ்” ஆகுமாக்கப்பட்ட காரியமேயன்றி அது எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரணாகி விடாது.
அதனால், ஏதோ ஒரு வகையில் பயன்தான் கிடைக்குமேயன்றி பாவம் வந்துவிடாது. இதை எதிர்ப்போர் இவ்விடயத்தை ஆழமாக ஆய்வு செய்து இச்செயல் “ஷிர்க்” என்றும் “பித்அத்” என்றும், மூட நம்பிக்கை என்றும் “பத்வா” வழங்குவதையும், மிம்பர் மேடைகளில் முழங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
இது தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகள், பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட பலம் குறைந்த நபீ மொழிகளை ஆதாரமாகக் கொண்டு செயல்பட முடியும் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
இவ்வழக்கம் ‘ஹறாம்” என்பதற்கோ, “ஷிர்க்” என்பதற்கோ ஆதாரம் இல்லாதிருப்பதாலும், ஆனால் “முபாஹ்” ஆகும் என்பதற்கு ஆதாரம் இருப்பதாலும் இதை எதிர்ப்போர் இது விடயத்தில் குறைந்த பட்ஷம் விரும்புவோர் செய்யட்டும், விரும்பாதோர் விட்டு விடட்டுமென்றாவது சொல்ல வேண்டும் என்று அவர்களை அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்ந்து ஓர் ஊரில் தொன்று தொட்டு நடந்துவந்த ஒரு வழக்கம் “முபாஹ்” ஆகுமாக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் அதை அப்படியே விட்டு விட வேண்டுமேயன்றி அதை தடுத்து நிறுத்துவதும், அதை கருவாகக் கொண்டு ஊர் மக்களிடம் பிளவையும், பிரச்சினையையும் உருவாக்குவதும் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். குழப்பவாதிகளின் கீழ்தரமான செயலுமாகும்.
அஸ்ர் தொழுகையின் பின் தொழுதவர்களில் ஒரு சிலர் மறுசிலருடன் “முஸாபஹா” கை கொடுத்து ஸலாம் சொல்வது போன்று சூரிய கிரகணத் தொழுகையும், சந்திர கிரகணத் தொழுகையும் மார்க்கத்தில் சுன்னத் ஆக்கப்பட்டுள்ளதற்கான காரணம் இங்கு ஆய்வுக்கு எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஒடுக்கத்துப் புதன் கிழமை எழுதி தலையில் தேய்த்துக்கும் திருகுர்ஆன் வசனங்கள்
ஒடுக்கத்துப் புதன் இஸ்ம்
سلا م قولا من رب رحيم
سلا م قولا من رب رحيم
سلام على عباده الذين اصطفى
سلام على نوح فى العالمين
سلام على إبراهيم
سلام على موسى وهارون
سلام على إلياسين
سلام هي حتى مطلع الفجر
--முற்றும்--
இக்கட்டுரை 24.03.2006 ம் ஆண்டு அதிசங்கைக்குரிய ஷைகுனா மௌலவீ அல்ஹாஜ் ஏ. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்களினால் எழுதப்பட்டு கல்முனை ஈராக் நட்புறவு ஒன்றியத்தினால் “ஒடுக்கத்துப்புதன் ஒரு கண்ணோட்டம்” எனும் தலைப்பில் இலங்கையில் பிரசுரமாக வெளியிடப்பட்டதாகும்.