இலங்கை இஸ்லாமிய மெஞ்ஞானப் பேரவை வெளியீட்டில் 08.06.1986ம் ஆண்டில் வெளிவந்த ஞானத்தந்தியிலிருந்து
அதிசங்கைக்குரிய ஞானபிதா அறிஞர் மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹி
நோன்பு நோற்குமுனக்கு ஒரு நோக்கமிருக்க வேண்டும் அந் நோக்கம் நோன்பு விதிக்கப்பட்ட நோக்கமாகவுமிருக்க வேண்டும். நோன்பு நோற்பதால் பகல் நேரத்தில் உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் நீயும் நோன்பு நோற்பவர்களும் அல்லாஹ்வுக்கு மிச்சப்படுத்தி கொடுக்கிறீர்கள் என்று கருதிவிடாதே!
உலக முஸ்லீம்கள் ஒரு வருடத்தில் முப்பது பகல் உண்ணாமல், பருகாமல் நோன்பு வைப்பது அவனுக்கு மிச்சப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல. இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டபின் நோன்பின் நோக்கமென்னவென்பதை ஆராய்ந்து பார்.
நோக்கம் என்ன வெனில் நீ உனது மனவெழுச்சிக்காளாகாமலும், நீ உனது சிற்றின்ப காம உணர்வுக்கடிமையாகாமலும் இருப்பதே நோன்பின் பிரதான நோக்கமாகும். மனவெழுச்சியும், காம உணர்வும் எதனாலேற்படுகின்றதென்பது உனக்குத் தெரியுமா? மிதமிஞ்சியுண்பதும், மிதமிஞ்சிப் பருகுவதும் காம உணர்வைத் தூண்டுபவைகளாகும்.
மிதமிஞ்சிய உணவின் மூலம் உனதுள்ளம் இருளடைகின்றது. பலவீனமாகிறது.ஷைத்தானின் ஆட்சி அதனால் அதிகப்படுகிறது. காம உணர்வு தானாகப் பிறக்கிறது. பெண்ணாசை உருவாகின்றது. அதனால் பென்னாசையும் ஏற்படுகிறது. “உனது உடலில் எங்கெல்லாம் இரத்தம் ஒடுகிறதோ அங்கெல்லாம் ஷைத்தானும் ஒடிக் கொண்டிருக்கிறான். எனவே, பசித்திருப்பதன் மூலம் அவன் ஓடுமிடங்களை நெருக்கமாக்கி வையுங்கள்” நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த நபீ மொழிமூலம் பசித்திருப்பதினால் ஷைத்தானின் ஆட்சி பலம் குறைந்துவிடுகிற தென்பதும், அதனால் தீய எண்ணங்களும் தீச் செயல்களும் முற்றாக நின்று, அல்லது குறைந்து விடுகிறதென்பதும் தெளிவாகிறது.
இவ்வுண்மையை உனது வாழ்கையில் அனுபவரீதியாக கண்டிருப்பாயென நினைக்கின்றேன். பசியென்றால் என்னவென்று கூடத் தெரியாதவர்கள் மனிதர்களில் இருக்கிறார்களல்லவா? இவர்கள் பசித்திருப்பதினால் ஏற்படும் பயனை அறிந்திருப்பார்களா? அனுபவித்திருப்பார்களா?
சோதரா! உன் நிலை என்ன? நீ பசித்திருந்ததுண்டா? பசித்திருப்பதாலுண்டாகும் நன்மையை நீ அறிந்திருக்கிறாயா? பேரின்பத்தை நீ அனுபவித்திருக்கிறாயா? மிதமிஞ்சி உணவருந்தும் நிலை உன்னிடமிருந்து மாறி, அளவோடு உண்டு அளவோடு பருகும் நிலை ஏற்படாதவரை நீ பசித்திருக்கவோ பசியின் இன்பத்தை காணவோ முடியாது.
ஞானவழி நடக்கும் நீ பசித்திருப்பதை ஒரு வணக்கமாக கருதி வாழ். ஞான வழி நடப்பவர்களுக்கு கூறப்படுகின்ற உபதேசங்களில் “பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற உபதேசம் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து கொள். எனவே நோன்பின் நோக்கமென்ன என்பதை முதலில் தெரிந்தான் அந்நோக்கத்திற்கேற்ப நோன்பு நோற்க வேண்டும்.
வழமைக்கு மாறாக மிதமிஞ்சிய உணவை நிறுத்தி, பசித்திருந்து அதன் மூலம் உன்னிலுள்ள ஷைத்தானின் தன்மைகளைக் குறைத்து மன வெழுச்சியையும் காம உணர்வையும் அழித்து விடுவதுதான் நோன்பின் நோக்கமென்பதை அறிந்து அமலில் இறங்கு.
சகோதரா! நோன்பு மாதத்தில் நீ எந்த அளவு உண்ணுகின்றாய்? எந்த அளவு பருகுகின்றாய் என்பதை சற்று யோசித்துப்பார்! சஹர் செய்யும் பொழுது நப்சுக்கு வழிப்பட்டு, சாதாரண காலத்தில் உண்பதை விட மிக ருசியாகவும், அதிகமாகவும் உண்ணுகிறாய்! மேலும் பகல் நேரம் பசியேற்படாமலிருக்கும் நோக்கத்துடன் உண்ணுகிறாய். ஒரு பகல் உண்ணாமலிருப்பதையிட்டு அதற்காக நீ உட்கொள்ளும் உணவு பல நாட்களுக்கு போதுமானதாயிருக்கிறது.
அதேபோல் நோன்பு திறந்த பின்பும் மித மிஞ்சி உண்ணுகிறாய், இந்நிலையில் நீ நோற்கின்ற நோன்பு எங்ஙனம் உண்மையான நோன்பாகப் போகிறது? ஏனெனில் உனது நோன்பில் நோன்புடைய பிரதான நோக்கமே இல்லாமருக்கின்றது.
இரண்டு நேரங்களிலும் மிதமிஞ்சி உண்டு, நோன்பு நோற்கின்ற நீ பகல் நேரத்தில் பசியை அனுபவிக்கிறாயா? இல்லை! நிச்சயமாக பசியை நீ அனுபவிக்கவே இல்லை. அவ்வாறு நீ நோற்ற நோன்பில் நோக்கமே உண்டாகவில்லை. எனவே நப்சுக்கு மாறு செய்யாமல் ருசியாகவும் மிதமிஞ்சியும் சாப்பிட்டு நோற்கப்படுகின்ற நோன்பு பெயரளவில் நோன்பாயிருந்தாலும் அது உண்மையான நோன்பே அல்ல. அவ்வாறு நோன்பு நோற்றவர் ஸாயிமீன் ( நோன்பாளிகள்) கூட்டத்தில் சேரவுமாட்டார்.
நீ வழமையாக நோன்பு நோற்று வந்தவனாயிருந்தால், எந்த வகையில் எந்த அடிப்படையில் நோன்பு நோற்று வந்திருக்கிறாய் என்பதை சற்று எண்ணிப்பார்! நீ நோற்றுள்ள பல நூறு நோன்புகளில் என்தனை நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமென்பதை யோசித்துப்பார்! இவ்வருடம் எப்படி நோற்பதற்கு யோசிக்கின்றாய்!
நோன்பாளியின் ஒருவகை மகிழ்ச்சி.
அன்பு சகோதரா! “நோன்பாளிகளுக்கு இரண்டு சந்தோஷமுண்டு. ஒன்று நோன்பு திறக்கும் பொழுது மற்றது தனது இறைவனை சந்திக்கின்ற பொழுது. என்பதாக நபீ (ஸல்) கூறியுள்ளதை நீயறிவாயா? இவ்விரு சந்தோசங்களும் எவை? அவை எதனால் ஏற்படுகிறது என்பதை சற்று நீ அறிந்து கொண்டால்தான் நோன்பு என்ற வணக்கத்தில் பிரவேசிக்கப் போகின்ற உனக்கு உதவியாயிருக்கும்.
போலி உலமாக்களென்று நான் ஏற்கனவே கூறினேனே, அவர்கள் இதற்கு பற்பல விளங்கங்களை கூறுகின்றார்களாயினும் அவ்விளக்கம் பொருத்தமற்றதும் புரட்டலுள்ளதுமாகும். அப்போலிகள் இதற்குச் சொல்கின்ற விளக்கமென்னவெனில் நோன்பு திறக்கும் பொழுது ஈத்தம்பழம், வடை, கஞ்சி சம்பல் மற்றும் உருசி மிக்க உணவுப் பொருட்களைச் சேர்த்து அவைகளை முன்னே வைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவகை சந்தோசம் ஏற்படுகின்றதல்லவா? அதுதான் ஹதீஸில் குறிப்பிடப்பட்ட சந்தோஷமென்கிறார்கள்.!
அன்புச் சகோதரா! இவ்வகைச் சந்தோஷத்தைப் பற்றியா நமது நாயகம் முகம்மது நபீ (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்? வெறும் நீரிலும் ஈத்தம் பழத்திலும் நோன்பு திறந்திருக்கிறாயர்கள். அதுதான் நோன்பு திறப்பதற்கு சிறந்ததென்றும் அவர்களே கூறியிருக்கின்றார்கள்.
அதுவல்ல சகோதரா சந்தோசம்! நீ சஹர் செய்ததிலிருந்து நோன்பு திறக்கும் வரை எத்தனையோ விடயங்களை விட்டு நடந்தாயல்லவா? உறுப்புக்களால் பாவம் செய்வதை விட்டாய், அதேபோல் உள்ளத்தினால பாவம் செய்வதையும் அல்லாஹ் அல்லாத வேரதையும் மனதால் நினைப்பதையும் விட்டு நடந்தாய். இது பெரும் சாதனைதான்.
இச்சாதனை மூலம் நீ பெரும் அமல் ஒன்றினைச் செய்தவனாகின்றாய் அதன் விபரமென்னவெனில் “அல்லாஹ்வின் குணத்தைக் கொண்டு குணங் கொள்ளுங்கள்” என்று நபீகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களல்லவா? உரிய முறையில் நோன்பு நோற்கும் நீ, அல்லாஹ்வின் குணத்தைக் கொண்டு குணம் கொண்டவனாகின்றாய்.
“ அஸ்-ஸமத்” என்று அவனுக்கு ஒரு திருநாமம் உண்டு “சகலதையும் விட்டும் தேவையற்றவன்” என்பது அதன் பொருள் உரிய முறையில் நோன்பு நோற்கும் பொழுது இத்திருநாமத்தின் தன்மை உன்னிலுமேற்படுகிறதல்லவா?
உரிய முறையில் நோன்பு நோற்று அதனைப் பூர்த்தி செய்து திறப்பதற்காக இருக்கும் பொழுது அத்தகைய சிறப்பான தன்மை உன்னிலேட்பட்டதை நீ நினைக்கையில் உனக்கு சந்தோஷம் எற்படுமா? இல்லையா? மேற்குறித்த ஹதீஸில் இந்த சந்தோஷத்தைப் பற்றித்தான் நபீகள் நாயகம் (ஸல்) கூறினார்களென்பதை உணர்ந்து கொள்!.
நோன்பாளிக்கு ஏற்படுகின்ற இரண்டாவது சந்தோஷம் என்னவென்றால், நீ நோன்பு நோற்று வந்தவனாயிருந்தால் மறுமையில் அல்லாஹ்வைச் சந்திப்பு விசுவாசிகள் அனைவருக்கும் கிடைப்பது நிச்சயமாயினும் நோன்பாளிக்கு கிடைக்கின்ற சந்திப்பு அதிவிசேஷமானதாயிருக்கும்.
இது குறித்துத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பாளி இறைவனைச் சந்திக்கும் பொழுது அவனுக்குச் சந்தோஷமெற்படுகின்றதென்று குறிப்பிட்டார்கள். நீ உண்மையான முறைப்படி நோன்பு நோற்றால்தான் இவ்விரு சந்தோஷங்களையும் அனுபவிப்பாய்.
------------ முற்றும்------------