Thursday, July 5

மனதுக்கு மணம் தரும் மல்கம்பிட்டி

அகமியத்துக்காக பைசான் மதீனா
இலங்கையில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் மன அமைதியும் ஆத்மீக உயர்வும் தேடும் எவரும் தரிசிக்கும் புண்ணியத்தளம் மல்கம்பிட்டி. 

கிழக்கு மகாணத்தில் மட்டக்களப்பிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவிலும் கல்முனை நகரிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் நிந்தவூரிலிருந்து சரியாக 9 கிலோ மீட்டர் சம்மாந்துறை வீதியிலும் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் மல்கம்பிட்டி வீதியிலும் அமைந்துள்ளது இப் புனிதஸ்தளம். 

புனித மல்கம்பிட்டி தர்ஹா தூரத் தோற்றம்
இத் தளத்தை தரிசிக்க நினைக்கும் எவரும் இரண்டு வழிகளினூடாக இத்தளத்தை அடை முடியும் ஒன்று கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வீதியில் நேராக நிந்தவூர் சென்று அங்கிருந்து மல்கம்பிட்டி பாதையால் பயணிப்பதன் ஊடாகவும் மற்றும் கல்முனையிலிருந்து சம்மாந்துறைக்குச் சென்று சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியிலிருந்து மல்கம்பிட்டி பாதையால் பயணிப்பதன் ஊடாகவும் இத் தளத்திற்குச் செல்லலாம். 


“காணக்கண் கோடி வேண்டும்” என்ற கலைமாமணி நாகூர் சலீம் அவர்களின் வரிகள் இதற்கும் பொருந்தும். காரணம் காண்போர்கள் அணைவரும் மெய்சிலிர்க்கும் வண்ணம் பசுமையான வயல் நிலங்கள் சூழ அமைதியாகவும் அருள் பிளம்புடனும் காட்சியளிக்கும் இத் திருத்தளம். 

இத்திருத்தளத்தின் நாயகர்கள் மகான் சிக்கந்தர் அப்பா
மற்றும் மகான் கலந்தர் அப்பா ஆகியோரின் மஸார்
இத் திருத்தளத்தில் நல்லாட்சி புரிகின்றார்கள் இரண்டு பெரு மகான்களாக ஈரானின் குராஸான் பகுதியிலிருந்து இலங்கைக்கு வந்து சன்மார்க்கப் பணி புரிந்த சங்கைக்குரிய மகான்களான சிக்கந்தர் அப்பா நாயகம் அவர்களும் கலந்தர் அப்பா நாயகம் அவர்களுமாவர். 


இவ்விருமகான்களை தொடர்ந்து இத்தளத்திற்கு வந்து இன்னும் சில இறைநேசர்களும் இவ்விடத்தில் வாழ்ந்து இங்கேயே சமாதியுற்றிருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை சில வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது அதனை மெய்பிக்கும் வண்ணமே இத் திருத்தளம் குறித்து வாழையடி வாழையாக தொடரும் வாய் வழி வரலாறும் உள்ளது. 

தர்ஹாவில் உள்ள தோட்டத்தில் ஒரு பகுதி
இத்திருந்தளத்தை தரிசிக்கும் போது இத் திருத்தளத்தின் அமைவிடத்தின் அழகிலும் அமைதியிலும் நாம் எம்மையிழந்து மெய் மறந்து நின்றாலும் அவ்விடத்தை சாதாரணமாக பார்க்கும் எவருக்கும் சில கேள்வி உள்ளத்தில் எழலாம் “இந்த அதி நவீன காலமாகிய 2012 ஆண்டிலேயே மின்சாரம் வந்தடையாத அளவு பின்தங்கிய நிலையிலுள்ள இவ்விடம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வாறு இருந்திருக்கும்? இவ்விடத்தில் எவ்வாறு மனிதன் வசித்திருக்க முடியும்? 


ஆம் அக்கேள்விகளுக்கு பதிலாக அமைவதே அவர்களின் வரலாறுதான். அதனை நாம் அறிந்த அளவில் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறிய செய்தி. 

நாம் ஒரு நாள் எமது சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்களின் தர்பாரில் வீற்றிருக்கும் போது இது குறித்து எனது மனதிலிருந்த ஒரு சந்தேகத்தை அவர்களிடம் தெளிவு பெறும் நோக்கில் கேட்டோம். 

தர்ஹாவில் அமைந்துள்ள கிணறு
கேள்வி பெரிதாக ஒன்றும் இல்லை “இறைநேசர்களில் நாம் அறிந்த வரையில் பெரும்பாலானோர் மிகவும் பயங்கரமான காடுகளிலும் மலைகளிலும் சென்று வாழ்ந்துள்ளார்கள் அவ்விடத்தில் அவர்களின் வருகையின் பின்னாலேயே மனிதன் வாழத் தொடங்கியுள்ளான் அப்படியானால் இந்த சங்கைக்குரிய மகான்கள் இப்படியாகப் பட்ட பிரதேசங்களில் பயணிக்கும்போதோ அல்லது அவர்கள் வசிக்கும் போதோ அக்காடுகளில் வசிக்கும் எந்த உயிரினமும் அவர்களுக்கு தீங்கு செய்வதில்லையா? என்றுகேட்டோம்

திருத்தளத்தில் உள்ள பள்ளிவாயல்
அதற்கு ஷேய்கு நாயகம் அவர்கள் ஒரு இறை நேசருக்கு அனைத்து உயிரினங்களும் கட்டுப்படும் அவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு, மாறாக எந்த உயிரினமாவது அவர்களை தீண்டும்நோக்கில் அத்தகைய மகான்களுக்கு தீங்கு விளைவித்தால் அடுத்த கணமே அவை இறந்துவிடும் என்றார்கள்.

வுழூ செய்யுமிடம்
இங்கே சமாதி கொண்டுள்ள சங்கைக்குரிய மகான்கள் இருவரும் இவ்விடத்துக்கு ஈரானிலிருந்து வருகை தந்து மனிதச் சஞ்சாரம் மிகக் குறைவாக இருந்த இந்த காட்டுப்பகுதியில் தங்கி தமது இறைவனை துதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். 


அக்காலப்பகுதியில் ஒருநாள் இவ்வழியாக மாடு மேய்க்கும் இடையர் ஒருவர் தனது எஜமானின் மாட்டிலிருந்து பால் கறந்து அதனை எஜமானிடம் எடுத்துச் செல்வதற்காக இவ்வழியினால் வரும்போது, அங்கே சஞ்சாரம் செய்து வந்த இம் மகான்களில் ஒருவர் தங்களின் தாகத்தினை தீர்த்துக் கொள்வதற்காக இடையர் வைத்திருந்த பசுப்பாலை தரமுடியுமா எனக் கேட்டார்களாம். 

திருத்தளத்தின் உள்ளே அமைந்துள்ள தர்ஹா
அதற்கு பசுப்பாலை வழங்க மறுத்த இடையர், தனது எஜமானுக்காக இதனை கொண்டு செல்வதாகக் கூறி மறுத்து தனது எஜமானிடம் கொண்டு சென்றாறாம். எஜமானிடம் பாலை வழங்கிய போது அதனை திறந்து பார்த்த எஜமான் மருன்டு போனார்களாம் காரணம் பசுப்பால் இருந்த பாத்திரத்தில் பால் அனைத்தும் இரத்தமாக இருந்ததாம்.

இத்தளத்தில் சமாதிகொண்டுள்ள மற்றுபல மகான்களில் ஒருவர்
உடனே அதிர்ச்சியடைந்த எஜமானர் என்ன நடந்தது! என்று கேட்டாராம். அதற்கு அந்த இடையர் நமக்குச் சொந்தமான இந்தக் காட்டுப்பகுயில் சிலர் வந்து தங்கியுள்ளனர். அவர்களை பார்க்கும் போது பெரியார்கள் போல தெரிகின்றது. நான் பாலைக் கறந்து கொண்டு வரும் வழியில் அதனை தங்களுக்கு வழங்க முடியுமா என்று கேட்டார்கள் நான் மறுத்துவிட்டு பாலை எடுத்து வந்தேன் என்று கூறினாராம். 


உடனே அவர்களை நாம் பார்க்க வேண்டும் என்று அங்கே வந்த அந்த பண்னைக்கார தனவந்தர் மகான்களையும் அவர்களின் சீடர்களையும் கண்டவுடன் மிகவும் கண்ணியமாக அவர்களை அணுகி இடையர் செய்த தவறுக்காக மன்னிப்புக் கோரிய பின்னர். தாங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்டார்களாம்.

மற்றுமொரு மஸார்
அதற்கு அங்கே தங்கியிருந்த மகான்களான சிக்கந்தர் அப்பா நாயகம் அவர்களும் கலந்தர் அப்பா நாயகம் அவர்களும் தாங்கள் வசிப்பதற்காக இந்த இடத்தை எங்களுக்கு தர முடியுமா என்று கேட்க அதனை அவர்களுக்கே உடனே வழங்கினாராம் அந்தப் பண்ணைக்காரர்.


இவ்விடத்திலேயே இன்றும் தர்ஹா அமைந்துள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த புண்ணிய தளத்திற்கு ஒவ்வொறு வருடமும் முஹர்றம் மாதம் ஆசூறா தினத்தில் அவர்கள் பிறந்த ஊரான குராஸான் பகுதியிலிருந்து பல மக்கள் மகான் அவர்களை தரிசிப்பதற்காக வந்து செல்வதுடன் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகான்களில் ஒருவரான மகான் கலந்தர் அப்பா அவர்கள் குராஸான் பகுதி மன்னராக இருந்தவர்கள் என்ற செய்தியைச் சொல்லிச் செல்கின்றனர்.

தவிரவும், இந்தியாவின் தமிழ் நாட்டின் காயால் பட்டணத்திலிருந்து இத்திருத்தலத்திற்கு வந்து இங்கேயே வாழ்ந்து இறைவனையடைந்த சில மகான்களின் மஸார்களும் இங்கே உள்ளது இவர்களின் குடும்பத்தவர்களும் இந்தியாவிலிருந்து வருடத்திற்கு ஒரு தடவையாவது இப் புண்ணிய தளத்தை தரிசித்துச் செல்கின்றனர்


இப்புனித தளத்தினை தரிசித்துச் செல்வதற்காக தற்போது இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து முஸ்லீம்கள் அல்லாத ஏனைய மதத்தவர்களும், அரசியல் பிரமுகர்களும் படித்தவர்களும் பாமரர்களும் வந்து செல்வது இறைநேசர்களின் காலடியில் அனைத்தும் அடிபணியும் என்ற செய்தியை எமக்குச் சொல்கின்றது.


என்றாலும், தற்போது இஸ்லாம் என்ற போர்வையில் குதர்கம் புரியும், குறிப்பாக சம்மாந்துறையில் வசிக்கும் சில துரதிஸ்டக்காரர்கள் காலா காலமாக இப் புனித தளத்தை இல்லாதொழிப்பதற்காக தங்களால் இயன்ற முயற்சிகளை செய்தே வருகின்றனர் என்பதையும் நாம் அறிய முடிகின்றது. 

மிகவும் சிறப்பும், அழகும் மாட்சிமையும் அமைதியும் ஆளுமையும் குடி கொள்ளும் இத்தளத்திற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்த பல எதிரிகள் இறைவனால் தண்டிக்கப் பட்ட வரலாற்றையும் நாம் இங்கு காணலாம். இவர்களில் பலர் இருந்த இடம் தெரியாமலேயே மறைந்து விட்டனர்.


நூற்றாண்டுகள் பழமையான புனித மல்கம்பிட்டி திருத்தளமானது அன்றிலிருந்து இன்றுவரை நாடிவருவோர்களின் குறை தீர்கும் தளமாகவும் மன அமைதியளிக்கும் இடமாகவும் விளங்கி வருகின்றது. 

இலங்கையில் மட்டுமின்றி உலகில் பல நாடுகளிலிமிருந்து பக்தர்கள் வந்து செல்லும் இத்திருத்தளம் அமைந்துள்ள பகுதி இன்று வரை மின்சாரம் சென்றடையாத இடமாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். 
ஷெய்குநாயகம் அவர்களுடன்
இத்திருத்தளத்தை தரிசிக்க செல்பவர்கள் எவரும் தங்கிச் செல்வதற்கான மண்டபம் உட்பட சகல வசதிகளையும் கொண்டுள்ள இத்தளம் அமைதியையும் ஆளுமைமையும் விரும்பும் எவரும் தேடிச் செல்லும் தளமாகும். 


அறிவுத் தாகமும் இறைவனின் நேசத்தையும் தேடும் எவருக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.
--------------------------முற்றும்----------------------------------

அகமியத்துக்காக பைசான் மதீனா

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK