-பைசான் மதீனா-
இன்று சனிக்கிழமை (27.10.2012) தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை இலங்கை முஸ்லீம்கள் மிகவும் சந்தோசத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். கிழக்காசியாவிலேயே முஸ்லீம்கள் அடர்த்தியாக வாழும் காத்தான்குடியில் இப்பெருநாள் கலை கட்டிக்கொண்டிருக்கின்றது.
காத்தான்குடியில் வாழும் சூபிஸ வாதிகளுக்கு இப் பெருநாள் ஒரு மிகப் பெரும் சோகத்தையும் சுமந்தே வந்தது அச் சோகம் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற உமர் மாமாவின் மரணம் 83 வயதில் அன்னார் இறையடி சேர்ந்தாலும் அன்னாரின் மறைவு ஏகத்துவ வரலாற்றில் ஒரு சோகமேயாகும். உமர் மாமாவை ஞாபகமூட்டும்போது இனி எப்போதும் சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்கள் கலீமாவுக்காக தாங்கிக்கொண்ட சுமைகளும் சேர்த்தே ஞாபகமூட்டப்படும்.
ஷெய்குநாயகம் அவர்கள் தனதில்லதில். |
காரணம் இக்கொள்கையை நிலைநாட்ட ஞானபிதாவால் நடாத்தப்பட்ட போராட்டத்துக்கு உறுதுணையாக நின்ற ஒரே களம் உமர் தோட்டம். அது வரலாற்றில் என்றும் மறக்க முடியாததாகும்.
புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினப் புகைப்படங்கள் மற்றும் பயான் இணைக்கப்பட்டுள்ளன.
காரணம் காத்தான்குடியில் 1978ம் ஆண்டு மார்க்கப் புரட்சி காத்தான்குடியில் மார்கெட் சதுக்கத்தில் இடம் பெற்ற மீலாத் விழாவில் விதைக்கப்பட்டது. அது மார்கப்பிரச்சினை என இங்கே அழைப்படுகின்றது. அதை சுருக்கமாகத் தெரிந்து கொள்வதாயின்
ஞானபிதா அவர்கள் பெருநாள் சொற்பொழிவின்போது. |
காத்தான்குடி மீரா பள்ளி மார்கெட் சதுக்கத்தில் 1978ம் ஆண்டு ஒரு மீலாத் விழா இடம் பெற்றது. இம்மீலாத் விழாவில் பிரதமப் பேச்சாளராக அக்காலப்பகுயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய மார்க்கப் பிரசங்கி, ஈழத்தில் சொற் கொண்டல் என புகழாரம் சூட்டப்பட்ட சங்கைக்குரிய ஷெய்கு நாயகம், காதிமுல் கவ்மி மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களுடன் மௌலவீ மர்ஹூம் பாறூக் காதிரி அவர்களும் அக்காலத்தில் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹூம் பரீட் மீராலெப்பை அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பெருமானார் (ஸல்) அவர்களின் அருமை பெருமைகளைக் கூறினர்.
பெருநாள் வாழ்துச் சொல்ல அலையாக கூடியிருக்கும் முஹிப்பீன்கள் |
மார்கெட் சதுக்கத்தில் இடம் பெற்ற மீலாத் விழாவில் பிரதம பேச்சாளருக்கு முன்னராக மர்ஹூம் பரீட் மீராலெப்பை (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களும் அவர்களுக்கு முன்னராக மர்ஹும் பாறூக் காதிரி அவர்களும் உரையாற்றுவதாக இருந்தது.
பெருமானாரின் பெருமைகள் பற்றி உரையாற்றிய மர்ஹூம் பாறூக் காதிரி அவர்கள் உலகில் அவதரித்தபோது பெருமானார் சுன்னத் செய்யப்பட்டவர்களாப் பிறந்தார்கள், அவர்கள் எம்மைப்போன்று தாயின் அபத்தின் ஊடாகப் பிறக்கவில்லை போன்ற பெருமானாரின் பெருமைகளை கூறியதுடன் பெருமானாருக்கு எங்களுக்கு ஏற்படுவது போன்று கனவில் ஒரு போதும் ஸ்கலிதம் ஆகியது கிடையாது போன்ற உண்மைகளை கூறி முடித்தார்கள்.
ஈழத்து கஸ்ஸானுடன் முஆனஹா செய்யும் முஹிப்பீன்கள் |
அடுத்த பேச்சாளராக உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் பரீட் மீராலெப்பை அவர்கள் பெருமானார் பற்றி மர்ஹூம் பாறூக் காதிரி அவர்கள் பேசிய விடயங்கள் ஆதாரமற்றவை என்பதுடன் பெருமானார் (ஸல்) அவர்கள் எம்மைப் போன்ற சாதாரன மனிதர் என்பதுடன் பெருமானார் அவர்களுக்கு எங்களைப் போன்று கனவில் ஸ்கலிதம் ஆகும் என்று வஹ்ஹாபிசத்தை பகிரங்கமாகப் பேசினார்கள்.
பெருநாள் ஹுத்பா ஓதும் மௌலவீ பைசல் றப்பானீ. |
(மர்ஹூம் பரீட் மீராலெப்பை அவர்கள் ஏறாவூரில் அடக்கம் செய்யப்பட்டு நல்லாட்ச்சி புரிந்து வரும் சேர்மன் அவ்லிய்யாஹ் அவர்களின் புதல்வராவார். அன்னாரும் ஏறாவுரில் உள்ள சேர்மன் அவ்லிய்யாஹ் தர்ஹாவிலேயே தனது குடும்பத்தினருடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.)
கூடியிருந்த மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இக்குழப்பத்திற்கு பதிலை ஈழத்தின் சொற்கொண்டல் ஞானபிதா மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களிடம் எதிர்பார்த்தார்கள்.
இறுதியாக உரையாற்ற எழுந்த ஈழத்தின் சொற்கொண்டல் பெருமானார் அவர்களின் அகமிய நிலைகள் பற்றியும் இறைவனின் தாத் பற்றியும் பகிரங்கமாகப் பேசினார்கள். அத்துடன் மர்ஹூம் பாறூக் காதிரி அவர்களின் கருத்துக்களை வலிமைசேர்க்கும் வண்ணம் ஆதாரத்துடன் விளக்கமளித்தார்கள்.
மட்டுமல்லாமல் கலீமாவுக்கும் சரியான பொருளாகிய “அல்லாஹ் தவிர இலாஹு இல்லை” என்ற பொருளே சரியானது அதுவரை காலமும் உங்களுக்கு உலமாஉகளால் சொல்லப்பட்டுவந்த “வணக்கத்திற்கு பாத்திரமான நாயன் அல்லாஹ் தவிர வேறில்லை” என்ற கருத்துப் பிழையென்றும் ஞானமழை பொழிந்தார்கள்.
இதனால் காத்தான்குடியில் மார்க்கப்புரட்சி வெடித்தது. அக்காலகட்டத்தில் காத்தான்குடியின் மிகப் பெரும் மார்க்க அறிஞராகவும் ஷெய்குநாயகமாகவும் திகழ்ந்த சங்கைக்குரிய காமில் அஷ்ஷெய்கு அப்துர் ரஷீத் கோயாத்தங்கள் அவர்களிடம் பிரச்சினை தீர்வுக்காக கொண்டு செல்லப்பட்டது அதற்கு ஞானபிதா அவர்களின் கருத்துக்கள் முற்றிலும் சரியானது என்று கூறிய மௌலானா வாப்பா அவர்கள் ஞானபிதா அவர்களை தனது தக்கிய்யாவாகிய முகைதீன் தக்கியாவில் தொடர்ந்து பயான் பன்னுமாறும் பணித்தார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த அக்கால உலமாஉகளும் அரசியல் வாதிகளும் அதனை மாக்கத்தை அரசியலாக்கினர். மௌலவீ அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களும் அவர்களை சரி கண்டோரும் முர்தத் என்று பத்வா வழங்கியதுடன். சங்கைக்குரிய மௌலானா வாப்பா அவர்களுக்கும் பல துன்பங்களை கொடுக்கத் தொடங்கினர்.
இதனால் மனமுடைந்த மௌலானா வாப்பா அவர்கள் காத்தான்குடிக்கு இஸ்லாத்தை போதிக்க ஒரு ஒளி தோன்றிவிட்டதாக சங்கைக்குரிய ஞானபிதா அவர்களை சுட்டிக்காட்டிவிட்டு காத்தான்குடியை விட்டுச் சென்றார்கள்.
அதுமட்டுமல்லாது உலமாக்களுக்குக்குரிய பிரச்சினை அரசியலாக்கப்பட்டது அதனால் ஞானபிதா அவர்களை சரி கண்டோர் அனைவரும் “முர்தத்” என்று பத்வா உலமா சபையினால் வழங்கப்பட்டது.
இதனால் ஸூபிசத்தை ஆதரிக்கும் ஒரு கூட்டம் அது ஞானபிதாவின் தலைமையில் அணிதிரள குறித்த பத்வா வழிவகுத்தது. அத்துடன் ஞானபிதாவின் மீதும் அவர்களை சரி கண்டோர்மிதும் துப்பாக்கிச் சூட்டில் தொடங்கி சகல விதமான தாக்குதல்களும், ஒதுக்கவைப்புக்களும் காத்தான்குடியில் அரங்கேரியது. படசாலையில் சூபிஸவாதிகளின் பிள்ளைகள் படிக்க முடியவில்லை. திருமணங்கள் நடாத்த முடியவில்லை. பொருளாதாரத்தின் மீது பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இவை அனைத்தையும் இறைவனின் செயல் எனப் பொருந்திக் கொண்ட இவர்கள் அதனை எதிர்த்தும் பத்வாவை எதிர்த்தும் ஞானபிதா அவர்களின் தலைமையில் அகிம்சை வழியில் போராடினர். அதற்காக அவர்களுக்கு தனியான ஒரு இடமும் ஒரு அமைப்பும் தேவைப்பட்டது.
அதற்காக அகில இலங்கை மெஞ்ஞானப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் கையெழுத்துப் பத்திரிகையாக ஞானத் தந்தி மற்றும் சஞ்சிகையாக ஞானச் சுரங்கம் பின்னர் பத்திரிகையாக அல்மிஸ்பாஹ், அல் மிஸ்ஹாத் என்பன வெளியிடப்பட்டன.
இதன் பிரதான ஆசிரியராக ஈழத்து கஸ்ஸான் இப்றாஹிம் நத்வி அவர்கள் செயற்பட்டார்கள் கட்டுரைகள் இறை விளக்கங்கள் அனைத்தையும் ஞானபிதா அவர்களே பிரதானமாக எழுதினார்கள் இவ்வாறு இரவு பகலாக எழுத்துப் பணி தொடர்ந்தது.
இப்பணியின் ஆரம்ப காலகட்டத்தில் இறைவிளக்கம் அளிப்பதற்கும் எழுத்துப்பணியினை செய்வதற்கும் பத்ரிய்யஹ் ஜும்ஆப் பள்ளிவாயல் தவிர்ந்த ஒரு இடம் தேவைப்பட்டபோது அதற்காக காத்தான்குடி நதியாக் கடற்கரையினை ஞானபிதா தேர்வு செய்தார்கள்.
ஒரு நாள் ஞானபிதாவும் சீடர்களும் கடற்கரையில் கூடி இறைஞான அமுதை ஞானபிதா வழங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு மெலிந்த உருவமுடைய ஒருவர் ஒரு தேனீர் கேத்தலுடன் வந்தார்களாம்.
அனைவருக்கும் தேனீர் கொடுத்தார்களாம். கொடுத்து விட்டு சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்களிடம் “நீங்கள் இனி இங்கு வந்திருக்க வேண்டாம் எனது வளவில் வந்து இருங்கள்” என்று கூறி அவர்களை தங்களின் வளகிற்கு அழைத்துச் சென்றார்களாம் மட்டுமல்லாமல் ஞானபிதா வந்து இருந்து இறை அமுதினை வழங்குவதற்காகவும் தனது எழுத்துப் பணியினை தொடர்வதற்காகவும் தனது உடலினாலே கடல் மண்ணை சுமந்து வந்து மண்ணினாலான ஒரு மேடை போன்ற அமைப்பையும் செய்து கொடுத்திருந்தார்கள்.
மர்ஹும் உமர் மாமா. |
அவர்கள் வேறு யாருமல்ல நேற்று இறைவனையடைந்த உமர் மாமா. இவர்கள் அன்று தொடக்கம் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக சங்கைகுரிய ஞானபிதா அவர்களுக்கும் அவர்களினை சரி கண்டோருக்கும் அடைக்களம் வழங்கினார்கள். இவர்களின் உமர் தோட்டத்திலேயே இறைஞான அமுதினை எமக்கு எடுத்துப் போதித்துக் கொண்டிருக்கும் பல பத்திரிகைகளும், புத்தகங்களும் எழுத்துருவம் பெற்றன.
உமர்மாமா மிகவும் ஏழையாக இருந்தாலும் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை சத்திய இஸ்லாத்தை சரியான வழியில் போதிக்கும் பணிக்கு உறுதுனையாக இருப்பதிலேயே கழித்துள்ளார்கள்.
ஏகத்துவ வரலாற்றில் உமர்மாமாவை ஞாபகப்படுத்தும் வண்ணம் ஈழத்து கஸ்ஸான் மௌலவீ இப்றாஹிம் நத்வி அவர்கள் சுனாமியின் போது எழுதிய “இரு பக்கங்கள்” என்ற சிறுகதையில் (இச் சிறுகதை அகமியத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த்து) அவர்களை பற்றிய பதிவுகளை இட்டுள்ளார்கள் அத்துடன் அல் மிஸ்காத் பத்திரிகையில் “உமர் தோட்டத்தில் உதிர்ந்த முத்துக்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் எழுதியிருந்தார்கள்.
நாம் சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்ளை கடந்த வாரம் அவர்களின் கொழும்பு இல்லத்தில் சந்தித்தபோது ஒரு வேளை தான் ஒரிரு நாட்களுக்குள் கட்டாருக்கு பயணிக்கலாம் பயணித்தால் ஹஜ்ஜுப் பெருநாளை அங்கு கொண்டாட வேண்டிவரும். கட்டார் செல்லாவிட்டால் ஊருக்கு வருவேன் என்று கூறினார்கள். என்றாலும் கத்தார் பயணத்தை இடை நிறுத்தி பெருநாளைக்கு தினங்களுக்கு முன்னதாகவே திரும்பினார்கள். அதன் தாப்பதரியத்தை உமர் மாமாவின் மரணம் எமக்கு உணர்த்தியது.
பெருநாள் விசேட பயான்
மட்டுமல்லாமல் உமர்மாமாவின் ஜனாஸாத் தொழுகையையை ஷெகுநாயகம் அவர்களே ஹைராத் பள்ளிவாயலில் நடத்தினார்கள். இது பெரும்பாக்கியம். நாம் கனவிலும் நினைக்க முடியாத பாக்கியம். பாக்கியம் பெற்ற உமர் மாமா பாக்கியவானாகவே இறைவனையடைந்தார்கள். அன்னாருக்காக நாமும் பிராத்திப்போம். அத்துடன் அவரின் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கத்தாரில் வாழும் சுன்னத் வல் ஜமாஅத் வாதிகளும் முரீதீன்களும் ஷெய்குநாயகம் அவர்களின் வருகையை மிகவும் எதிர்பார்த்திருந்திருப்பார்கள். அந்தப்பாக்கியம் தங்களுக்கு கிடைக்கவேண்டும் என பிராத்தனை செய்திருப்பார்கள். ஆனால் ஒரு முரீதின் நிலையை ஒரு ஷெய்கு முழுமையாக அறிவார்கள். தனது அன்புக்குரிய முரீதின் நிலையறிந்து ஷெய்குநாயகம் அவர்கள் கத்தார் செல்லாமல் ஊர் திரும்பினார்கள். அவர்களின் இறுதி சடங்குகளை தலைமைதாங்கி நடாத்தியும் வைத்தார்கள்.
இவ்வருட தியாகத் திருநாளாளை நாம் மிகவும் விமர்சையாக்க் கொண்டாடிக் கொண்டிருந்தாலும் அது எமக்கு இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை மட்டும் நினைவூட்டவில்லை.
மாறாக சங்கைக்குரிய ஷெய்குநாயகம் அவர்கள் எங்களுக்காக சுமந்த கஸ்டங்களையும், சத்திய இஸ்லாத்திற்காக அவர்களை பின்தொடரும் உலமாஉகளும், முரீதீன்களும், முஹிப்பீன்களும் தாங்கிக் கொள்ளும் கஸ்டங்களையும், இழந்த உயிர்களையும், சொத்துக்களையும் ஞாபகப்படுத்துகின்றது.
இன்று உமர் மாமா உட்பட இதுவரை இறைவனை அடைந்த அந்த நல்லவர்களும், ஷஹீதுகளும் இன்றும் தாங்கிக் கொள்பவர்களும் எங்களுக்குள் தியாகிகளாகவே இருக்கின்றனர். தியாகத் திருநாள் எங்களுக்கு அந்த தியாகத்தையும் சேர்த்தே நினைவூட்டுகின்றது.
-முற்றும்-
அகமியத்துக்காக பைசான் மதீனா.
27.10.2012