இஸ்லாமிய புதுவருடம் முஹர்றம் ஆன்மீகம் கமழும் ஆஷூரா தினம்! புரிந்து செயற்படுவோம்.
சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹீம் நத்வீ

முஹம்மது நபீ (ஸல்) அலைஹி வஸல்லம்.
அனைத்து றசூல்மார்களிலும் நபீமார்களிலும் எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை உயர் படைப்பாக படைத்தான். அவர்களின் அந்தஸ்தை உலகறியச் செய்தான்.
மலக்குகள்
இதேபோல் மலக்குகளையும் படைத்து அவர்களில் சிலரை சிறப்பாக்கி வைத்தான்.
வலீமார்கள்
இறைநேசர்களான வலீமார்களில் குத்பு,கௌது, அப்தால், அவ்தாத், நுகபா, நுஜபா போன்ற படித்தரமுடையவர்களாக அமைத்தான்.
முஹம்மது நபீயின் உம்மத்
அதேபோல் உலகில் தோன்றிய மக்கள் அனைவரிலும் எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத் சமூகத்தினரை சிறப்பாக்கி உயரந்தஸ்தை அளித்தான்.
தேசங்கள்
இதேபோல் தேசங்களிலும் நாடுகளிலும் இறைவன் வித்தியாசத்தை வகுத்துள்ளான். மக்கா, மதீனா,ஜெருஸலம் போன்றவை சிறப்பம்சத்திற்கு எடுத்துக் காட்டாகும்.
புனித இடங்கள்
இதேபோல் இடங்களையும் இறைவன் தரப்படுத்தி உள்ளான். நபீகள் முஹம்மத் ஸல் அலைஹிவஸல்லம் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள புனித ரவ்ழாஹ் ஷரீபாஹ், புனித கஃபத்துல்லாஹ், மஸ்ஜிதுன் நபவீ, பைதுல் முகத்தஸ், அர்ஸ், குர்ஸ், லவ்கு, கலம், பைதுல் மஃமூர் , சொர்க்கங்கள், கஃபாவை அண்டியுள்ள புனிதத் தலங்கள், சியாரங்கள் தரப்படுத்தலுக்கு சான்றாக அமைகின்றன.
காலங்கள்
இதேபோல் காலங்களுக்கும், இறைவன் விசேட தன்மைகளைக் கொடுத்து வசந்த காலம், மாரி காலம், கோடைகாலம், போன்று வகைப்படுத்தி உள்ளான்.
வருடங்கள்
இதேபோல் வருடங்களையும் ஆமுல் பீல், ஆமுல் ஹுஸ்ன், போன்று ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான தன்மைகளைக் கொடுத்து சிறப்பாக்கி உள்ளான்.
மாதங்கள்
இதேபோன்று மாதங்களையும் ஒன்றுக்கில்லாத சிறப்பை இன்னொன்றுக்கு அளித்து சிறப்பித்துள்ளான். நபீகள் (ஸல்) அவர்களின் அவதாரத்தால் றபீஉனில் அவ்வலையும், ஒரு மாத நோன்பால், றமழான் மாதத்தையும், புனித ஹஜ்ஜால் துல்ஹஜ் மாதத்தையும், இவை போன்றவைகளையும் போன்றாகும்.
இதேபோல் மாதங்களில் முஹர்ரம், றஜப், துல்கஹ்தா, துல்ஹிஜ்ஜா ஆகிய நான்கு மாதங்களையும் சங்கையான மாதங்கள் எனவும் இவற்றில் யுத்தம் செய்யக் கூடாது என்றும் தடுத்துள்ளான்.
நாள்கள்
இதேபோல் நாள்களிலும் விசேடங்களை அமைத்துள்ளான் ஸ்தாபிதம், வியாபாரம், பிரயாணம், கல்வி போன்றவற்றிக்கு பொருத்தமாக முறையே ஞாயிறு, திங்கள், புதன் போன்ற நாள்களையும், நாள்களில் தலை நாளாகவெள்ளிக்கிழமையையும் அமைத்துள்ளான்.
அதனால் மற்ற நாள்கள் மோசமானவை என்பதல்ல, ஒவ் வொறு நாளுக்கும் ஒவ்வொறு சிறப்பை அல்லாஹ் வழங்கியுள்ளான். இதேபோன்றே காலங்கள், வருடங்கள், மாதங்கள் நேரங்களுமாகும்.
நேரங்கள்
நேரங்களில் லைலதுல் கத்ர் உடைய நேரம்வெள்ளிக்கிழமைகளில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்
ஒவ்வொறு தொழுகையின் நேரங்கள், நபீகள் (ஸல்) அவர்கள் பிறந்த நேரங்கள் மற்றும் இவைபோன்றவை சிறப்புக்குரியவையாகும்.
முஹர்றம்
இஸ்லாமிய மாதங்களில் முஹர்றம் தலை மாதமாகும். இம்மாதத்தில் பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அத்தனை அம்சங்களும் அகிலத்தாருக்கும் படிப்பினை ஊட்டக் கூடியவையாகவே அமைந்துள்ளன.
ஆசூறா
முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாள் ஆசூறா தினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முன்தினம் தாஸூஆ ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.
முஹம்மது நபீ (ஸல்) அவர்கள் மக்காவை துறந்து மதீனா வந்தபோது அங்கு வாழ்ந்த யூதர்கள் ஆசூ;றா பத்தாம்நாள் நோன்பு நோற்றிருந்தார்கள். இதுபற்றி நபீகள் (ஸல்) அவர்கள் வினவியபோது இன்றுதான் நபீ மூஸா (அலை) அவர்களும், தோழர்களும் பிர்அவ்ன் எனும் சர்வாதிகாரியையும், அவனது கூட்டத்தையும் தோற்கடித்த நாள் என்றும் இன்றுதான் பிர்அவ்ன் கடலில் மூழ்கி இறந்த நாள் என்றும் இதனாலேயே நோன்பு நோற்றோம் என்றும் நவின்றார்கள்.
இதைக் கேட்ட நபீ நாயகம் (எனது சகோதரர்) மூஸாவுக்கு கிடைத்த வெற்றியை முன்னிட்டு நீங்கள்நோன்பு நோற்பதைவிட நான் மிகத் தகுதியுடையவன் எனக்கூறி தாமும் அன்று நோன்பிருந்ததுடன். தான் அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் ஒன்பதாம் நாளும் நோன்புநோற்பேன் என்றார்கள். ஆயினும் அதற்கிடையில் நபீகள் (ஸல்) அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள்.
நபீகள் (ஸல்) ஒன்பதான் நாள் நோன்பு நோற்காவிடினும் நோற்பேன் என்று சொன்னதால் ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் சுன்னத்தாக்கப் பட்டுள்ளது.
நிகழ்வுகள்
முஹர்றம் பத்தாம் நாள் ஆசூறா தினம் அதிவிசேடங்களை உள்ளடக்கிய மாதினமாகும் சுருங்கக் கூறின்
- அன்றுதான் நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னித்தான்
- அன்றுதான் நபீ நூஹ் (அலை) அவர்களுடைய கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.
- அன்றுதான் நபீ மூஸா (அலை) நபீ ஈஸா (அலை) பிறந்தார்கள்.
- அன்றுதான் சர்வாதிகாரி நும்றூதால் நெருப்புக்கிடங்கில் எரியப்பட்ட நபீ (இப்றாஹிம்) அலை காப்பாற்றப்பட்டார்கள்
- அன்றுதான் நபீ யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
- அன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
- அன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
- அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் ( அலை) அதிலிருந்து வெ ளியேற்றப்பட்டார்கள்.
- அன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பமாக்கப்பட்டது.
- அன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்தது.
- அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு இறங்கியது
- தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
- அன்றுதான் சுலைமான் நபீ அவர்களுக்கு முழு உலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
- அன்றுதான் நபீ ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
- அன்றுதான் பிர்அவ்னும் அவனதும் சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
- அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்
- அன்றுதான் நபீ பேரர் ஹுசைன் (றழி) அஹ்லுல்பைத் என்றழைக்கப் படுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.
நல்லமல்கள்
இதனாற்றான் “ஆஷூறா” தினத்தில் றொட்டி சுட்டு நபீ பேரர்களான ஹஸன், ஹுசைன், பாதிமா, மற்றும் அஹலுல் பைத்தினரின் ஆத்மசாந்திக்காக யாஸீன் கத்ம் ஓதப்பட்டு வருகிறது.
இன்றுவரை இவ்வழக்கம் இலங்கையில் பல பாகங்களிலும் குறிப்பாக காத்தான்குடியிலும் இருந்து வருகின்றது. ஆனால் சமீபத்தில் தோன்றிய வழிகேடர்களால் இவ்வழக்கம் பித்அத் என்றும் ஷிர்க் என்றும் மக்களிடையே பரப்பப்படுகின்றது.
மேற்குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாளான ஆசூறா தினத்திலேயேதான் நிகழ்ந்துள்ளன.
இதனாற்றான் இந்நாள் முஸ்லீம்களுக்கு விசேட நாளாக அமைந்துள்ளது. முஸ்லீம்கள் இந்நாளை சாதாரண நாளாக நினைத்து வீணாக கழிக்காமல் நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், ஸலவாத் சொல்லுதல், திக்ர், பிக்ர் செய்தல், தியானம் செய்தல், தான தர்மம் செய்தல், மஸார்களை ஷியாரத் செய்தல் போன்ற நல்ல விடயங்களில் ஈடுபடுதல் வேண்டும்.
நோன்பு
ஆஷூறா நோன்பு பற்றி நபீ (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டபோது, அது கடந்த வருடத்தின் குற்றங்களுக்கு அது பரிகாரமாக அமையுமென்று நபீகட்கரசர் நவின்றார்கள்.
ரமழான் மாதத்தில் நோற்கத் தவறிய “களா” நோன்பு உள்ளவனும், நேர்ச்சை நோன்புள்ளவனும் தாஸூஆ, ஆஷூரா ஒன்பதாம் பத்தாம் நாள்களில் தன்மீதுள்ள களா அல்லது நேர்ச்சை நோன்பு நோற்றால் அவன் நோற்ற நோன்பு நிறைவேறுவதுடன் இந்நாட்களில் நோற்ற இவ்விரு சுன்னத்தான நோன்புகளில் நன்மைகளும் கிடைக்கும்.
ஆனால், நியத்து வைக்கும்போது பர்ழான ரமழான், களா நோன்பு என்றும் நேர்ச்சை நோன்பு என்றும் நிய்யத்து வைக்க வேண்டும்.
களா அல்லது நேர்ச்சை நோன்பு இல்லாதவர்கள் தாஸுஆ, ஆஷூரா நோன்பு என்று நிய்யத்து வைக்க வேண்டும்.
ஆஷூரா தினத்தில் மனிதர்கள் நோன்பு நோற்பதுபோல் மிருகங்களும், பூச்சி புழுக்களும் நோன்பு நோற்கின்றன.
பறவை இனத்தில் முதலில் மைனா என்ற பறவை நோன்பு நோற்றது. ஆஷூரா தினத்தில் ஒருவன் தனது குடும்பத்தவர்களையும், நண்பர், உறவினர்களையும் பேணி நடந்து உதவிகள் செய்தால் அவனுக்கு அல்லாஹ் அருள் நிறைந்த வாழ்வளிக்கின்றான் என்றும் அவ்வருடம் முழுவதும் அவனுக்கு எண்ணற்ற அருள் புரிகின்றான் என்றும் நபீ (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
ஐம்பது ஆண்டுகளாக இவ்விடயத்தை நாங்கள் பரீட்சித்து வந்துள்ளோம். எவ்வித மாற்றமுமின்றி அருள் பெற்று வருகின்றோம். என்று மெய்ஞ்ஞானி சுப்யான் அத்தௌரீ (றஹ்) நவின்றுள்ளதாக அல் பறகஹ் எனும் நூலில் வந்துள்ளது.
ஏனைய நாட்கள்
மேலும் இம்மாதத்தின் முதல்நாள் இஸ்லாமிய புது வருடத்தின் முதல் நாளாகும் இந்நாள் அரபுலக மன்னர்களிடம் அதி விசேட நாளாகும். அவர்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து விசேட உணவு உண்டு மகிழ்வதுடன் நாட்டு மக்களுக்கும் உணவு படைத்து உதவும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
இம்மாதத்தின் நான்காம் நாள் நஜ்றான் நஸாறாக்களுடன் நபீ (ஸல்) அவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்.
இம்மாதத்தின் ஏழாம் நாள் நபீ யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளியேறினார்கள்.
இம்மாதத்தின் பதினேழாம் நாள் உஹது யுத்தம் நடைபெற்றது. அதில் நபீ (ஸல்) அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா (றழி) அவர்கள் கொலை செய்யப்பட்டு ஷஹீதானார்கள்.
இம்மாதம் இருபத்தைந்தாம் நாள் தொடக்கம், முதலாம் மாதம் முடியும் வரை “நஹ்ஸ்” உடைய (பறகத் குறைந்த) நாற்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்நாட்களில் திருமணம் செய்தல், வீடு கட்டுதல், வியாபாரம் போன்ற நற்காரியங்களை ஆரம்பித்தல் பொருத்தமற்றது என்பது வைத்திய நிபுணர்களின் கருத்துக்களாகும்.
இந்நாளில்தனா ஆத், தமூத் கூட்டத்தினர் பயங்கர சோதனை மூலம் அழிக்கப்பட்ட வரலாறுகள் சான்று பகர்கின்றன.
எனவே, புனித தாஸுஆ, ஆஷூரா தினங்களில் நோன்பு நோற்று நல்லமல்கள் புரிந்து நல்லடியார்களாவோமாக.
----------------ஆமீன் ------------------
அல் மிஷ்காத் ஞான இதழின் ஆசிரியரும் பத்ரிய்யஹ் பள்ளிவாயல் தலைவரும், எழுத்தாளரும், கவிஞருமான சங்கைகுரிய மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹீம் (நத்வீ) அவர்கள் ஜனவரி 2006 ம் வருடம் வெளியான அல்மிஷ்காத் மாத இதழ் 49க்கு எழுதிய கட்டுரை.